குரு பெயர்ச்சி, ஆடி அமாவாசை: சென்னையில் பித்ரு தர்ப்பணம், பரிகார பூஜை
சென்னை: ஆடி அமாவாசையை முன்னிட்டு சென்னை கலங்கரை விளக்கம் அருகே ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்து வழிபட்டனர்.
சென்னை மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயில் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று முன்னோர்களை வழிபட்டனர்.
சென்னையில் உள்ள சிவ ஆலயங்களில் நடைபெற்ற குரு பெயர்ச்சி பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பரிகாரம் செய்து வழிபட்டனர்.
ஆடி அமாவாசை
அமாவாசையன்று பித்ருக்களுக்கு செய்யும் பூஜை மூலமாக அவர்களுக்கு உணவும், குடிநீர் கொடுக்கப்படுவதாகவும் நம்பப்பட்டு வருகிறது.
அமாவாசையில் ஆடி அமாவாசையும், புரட்டாசி மற்றும் தை அமாவாசையும் சிறப்பானதாக கருதப்படுகின்றன.
தெற்கு நோக்கி பாயும் நதிகள்
அமாவாசை நாளில், பித்ருக்களுக்குக் காரியம் செய்து வணங்கினால், கூடுதல் பலன்களைப் பெறலாம் என்பது ஐதீகம். அதிலும், தெற்கு நோக்கிச் செல்லும் புண்ணிய நதியான காவிரி நதியுடன் மேலும் இரண்டு நதிகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறையில் நீராடி, பித்ருக்களுக்கான காரியங்களைச் செய்து ஸ்ரீசங்கமேஸ்வரருக்கு வில்வ மாலை சார்த்தி வழிபட, முன்னோர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
சென்னை கடற்கரையில் தர்ப்பணம்
மறைந்த முன்னோருக்கு ஆடி அமாவாசையன்று ராமேஸ்வரம், குமரி, பவானி கூடுதுறை சென்று தர்ப்பணம் செய்ய இயலாதவர்களுக்காக சென்னையில் மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயில் சார்பில் ஆண்டுதோறும் கலங்கரை விளக்கம் அருகே தர்ப்பண பூஜைக்கு ஏற்பாடு செய்து வருகிறது.
முன்னோர்கள் வழிபாடு
இன்று செவ்வாய்கிழமை காலை 5 மணி முதல் 9.30 மணி வரை தர்ப்பணம் செய்ய வருவோருக்குத் தேவையான தேவையான தாம்பூலத் தட்டு உள்ளிட்ட பூஜைகளுக்கு உரிய அனைத்து பொருட்களும் இலவசமாக ஸ்ரீ ஐயப்ப பக்த சபாவின் வழங்கப்பட்டது. காலை சிற்றுண்டியும் வழங்கப்பட்டது.
ஏராளமானோர் கடலில் நீராடி எள்ளும் அரிசியும் படைத்து வழிபட்டனர்.
குரு பெயர்ச்சி
ஆடி அமாவாசை நாளான இன்று மிக முக்கிய விஷேசமாக குரு பெயர்ச்சியும் நடைபெற்றது. இதனை முன்னிட்டு சென்னையில் உள்ள சிவ ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பாடி திருவலிதாயம்
பாடியில் உள்ள திருவலிதாயம் சிவ ஆலயத்தில் இன்று அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து குருபகவானை தரிசனம் செய்தனர். பரிகார பூஜைகளில் பங்கேற்றனர்.