குட்கா மோசடி வழக்கு: தமிழக டிஜிபி ராஜேந்திரன் பதவிக்கு நெருக்கடி? தலைமை செயலருடன் திடீர் சந்திப்பு
குட்கா புகாரில் தொடர்புள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் டிஜிபி ராஜேந்திரன் ஆகியோரை பதவி விலக வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வற்புறுத்தியுள்ளனர்.
Recommended Video
சென்னை: தமிழகத்தில் நடந்த குட்கா முறைகேடு வழக்கு குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்து வந்தது. பல தரப்பையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவர வேண்டிய வழக்கு இது என்பதால், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி, திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் சார்பில் ஹைகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
தடை செய்யப்பட்ட போதைப் பொருளான குட்கா தமிழகம் முழுவதும் தடையின்றி விற்கப்படுகிறது, சட்டவிரோத குட்கா விற்பனைக்காக அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றனர் என்பதும் புகார்.
குட்கா வழக்கில், சிபிஐ விசாரணைக்கு ஹைகோர்ட் உத்தரவிட்டு இன்று தீர்ப்பு வெளியிட்டுள்ளது. இதையடுத்து புகாரில் தொடர்புள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் டிஜிபி ராஜேந்திரன் ஆகியோரை பதவி விலக வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வற்புறுத்தியுள்ளனர்.
பொது வாழ்வில் இருப்பவர்கள் மீது பொய் புகார் வருவது சகஜம் என்று விஜயபாஸ்கர் பதில் அளித்துள்ளார். எனவே, டிஜிபி ராஜேந்திரனை பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ராஜேந்திரன் இன்று அவசரமாக தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையும், ராஜேந்திரன் சந்தித்து ஆலோசித்ததாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிகழ்வுகள் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.