ஆளுங்கட்சியினர் அரசின் கஜானாவில் தூர் வாருகிறார்கள்... ஸ்டாலின் பொளேர்!
'குட்கா ஊழல்' செய்து கொண்டிருந்தவர்கள் இப்போது குடிமராமத்துப் பணிகளிலும் ஊழல் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
திருச்சி: ஏரி, குளங்களை எல்லாம் தூர் வாரும் பணியை விட்டு விட்டு, அரசின் கஜானாவில் தூர் வாரும் பணியில் தான் இந்த அதிமுக ஆட்சி ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது என்று எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய மழைக் காலத்துக்கு முன்பாக ஏரி, குளங்கள் தூர் வாரப்பட்டு இருந்தால், மழை நீரை சேகரிக்கும் சூழல் உருவாகி இருக்கும். ஆனால், அதுபற்றி கவலைப்படாத எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, அந்தப் பணிகளை மேற்கொள்ளவில்லை.
நான் வைத்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு, தமிழகம் முழுவதும் திமுக சார்பில் அந்தப் பணிகள் சிறப்பாக நிறைவேற்றப்பட்டு உள்ளன. இன்னும் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து அந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஏரி, குளங்கள் மராமத்து
சட்டமன்றத்தில் இந்தப் பிரச்சினையை திமுக சார்பில் நாங்கள் எழுப்பி, 'அரசு உடனடியாக இதில் தலையிட வேண்டும்' என்று கேட்டுக் கொண்ட நேரத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், 'ஏரி, குளங்களை எல்லாம் தூர் வாருவதற்காக நாங்கள் 400 கோடி ரூபாயை ஒதுக்கி இருக்கிறோம்' என்றார்.
மழை பெய்யாத ஊரில் கூட்டம்
அதுமட்டுமல்ல, சேலத்தில் நேற்றைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரு நாடகத்தை நடத்தியிருக்கிறார். தற்போது, சேலம் பகுதியில் மிகப்பெரிய அளவில் மழை பெய்யவில்லை. ஆனால், சேலம் மாவட்ட அதிகாரிகளை எல்லாம் அழைத்து, உட்கார வைத்து ஒரு மிகப்பெரிய ஆய்வுக் கூட்டத்தை நடத்தியிருக்கிறார். அந்தக் கூட்டத்தில், 'மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்கள் எல்லாம் தூர் வாரப்பட்டு, மழை பெய்த காரணத்தால், நீர் நிலைகள் நிரம்பியிருக்கின்றன' என்று பட்டவர்த்தனமாக ஒரு பொய்யை தைரியமாக சொல்லியிருக்கிறார்.
வெள்ளை அறிக்கை வெளியிடுக
400 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்றது உண்மையென்றால், அந்த நிதியிலிருந்து எந்தெந்த மாவட்டங்களில், எந்தெந்த ஊர்களில் உள்ள ஏரிகள், குளங்கள் தூரெடுக்கப்பட்டன என்பதை ஒரு வெள்ளையறிக்கையாக வெளியிட முதல்வர் எடப்பாடி பழனிசாமி தயாராக இருக்கிறாரா?
கமிஷன், லஞ்சம்
தூர் வாருவதற்காக நிதியை அவர்கள் பேரம் பேசி, கமிஷன் வாங்கி, லஞ்சம் பெறும் நிலைதான் இன்றைக்கு இருக்கிறது. ஆகவே, ஏரி, குளங்களை எல்லாம் தூர் வாரும் பணியை விட்டு விட்டு, அரசின் கஜானாவில் தூர் வாரும் பணியில் தான் இந்த அதிமுக ஆட்சி ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.
எல்லாமே ஊழல் மயம்
'குட்கா ஊழல்' செய்து கொண்டிருந்தவர்கள் இப்போது குடிமராமத்துப் பணிகளிலும் ஊழல் செய்து கொண்டிருக்கிறார்கள், என்பதுதான் எனது பகிங்கரமான குற்றச்சாட்டு. இதை அவர்கள் மறுப்பதென்றால், 400 கோடி ரூபாயில் என்னென்ன பணிகள் செய்யப்பட்டன, எங்கெல்லாம் அந்தப் பணிகள் நடந்தன என்று வெள்ளையறிக்கையை வெளியிட வேண்டும்.
மோசமான நிலை வரும்
ஒருநாள் மழையிலேயே சென்னை உட்பட பல பகுதிகளில், வீடுகளுக்குள் வெள்ளம் வந்துவிட்டது. மழை தொடங்கியவுடனேயே இந்த நிலை என்றால், மழை அதிகரித்து பெருமழை பெய்து வெள்ளம் வரும் சூழ்நிலை ஏற்பட்டால், இன்னும் மோசமான நிலை ஏற்படும்.
எந்த பணியும் நடக்கவில்லை
அதனால் தான் முன்கூட்டியே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், நிவாரணங்கள் வழங்க தயாராக இருக்க வேண்டும் என்று ஒரு மாத காலத்துக்கு முன்பாகவே, நான் பலமுறை அரசுக்கு எடுத்துக் கூறினேன். ஆனால், அவர்கள் எந்தப் பணிகளையும் மேற்கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார் ஸ்டாலின்.