தமிழக அரசை ஆட்டம் காண வைத்த மாதவ ராவ்.. 10 மணி நேரம் நடந்த சிபிஐ விசாரணை.. யார் இவர்?
குட்கா ஊழல் பிரச்சனைக்கு மிக முக்கியமாக காரணமாக மாதவராவ் பார்க்கப்படுகிறார்.
சென்னை: குட்கா ஊழல் பிரச்சனைக்கு மிக முக்கியமாக காரணமாக மாதவ ராவ் பார்க்கப்படுகிறார்.
குட்கா நிறுவனம் ஒன்றின் துணை தலைவர் மற்றும் பங்குதாரரான இவர், தமிழக அரசு அதிகாரிகள் அமைச்சர்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவர். தற்போது இவர் உட்பட 6 பேர் சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று முதல் நாள் தமிழக அரசை சிபிஐ ரெய்டு மொத்தமாக ஆட்டிப்படைத்து . மொத்தம் 35 இடங்களில் சோதனை நடந்தது.அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, உள்ளிட்ட புள்ளிகளின் வீடுகளில் சோதனை நடந்தது.
அந்த டைரி
இந்த குட்கா ஊழலில் உண்மைகள் வெளியே வர காரணமாக இருந்தது, மாதவ ராவ் தான். இவரின் குட்கா கிடங்கில் 2016 ஜூலையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது மூட்டை மூட்டையாக குட்கா பொட்டலங்கள் கிடைத்தது. இதுதான் குட்கா ஊழலில் பெரிய திருப்பமாக அமைந்தது. அப்போதே வருமான வரித்துறையினர் 8 மணி நேரம் மாதவ ராவிடம் விசாரணை நடத்தினர்.
பல பெயர்கள் இருந்தது
அப்போது அவர் பல பெயர்களை விசாரணை அதிகாரிகளிடம் குறிப்பிட்டார். அதன் அடிப்படையில்தான் அப்போது விஜயபாஸ்கரிடம் விசாரணை செய்யப்பட்டது. அதன்பின் வரிசையாக விஜயபாஸ்கருக்கு நெருக்கமானவர்களிடம் சோதனை செய்யப்பட்டு நிறைய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. இப்படி இந்த சோதனைக்கு அடிப்படையாக இருந்ததே மாதவ ராவ்தான்.
சிபிஐ நடத்திய விசாரணை
அதன்பின் இந்த வழக்கு சிபிஐக்கு மாறியதில் இருந்தே தீவிரமாக விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில்தான் கடந்த 8 நாட்களுக்கு முன் மாதவ ராவ் சிபிஐ அதிகாரிகள் மூலம் விசாரிக்கப்பட்டார். அப்போது அவர் வீட்டில் இருந்து ஒரு டைரியும், சில ஆவணங்களும் கிடைத்தது. அதை வைத்துதான் நேற்று முதல் நாள் 35 இடங்களில் சிபிஐ அதிரடிட் ரெய்டு நடத்தியது.
பெயர்களை உளறினார்
இந்த விசாரணை 10 மணி நேரம் நடந்து இருக்கிறது. இதில் யார் யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது. டிஜிபி, முன்னாள் டிஜிபி, விஜயபாஸ்கர் ஆகியோருக்கு இதில் என்ன தொடர்பு என்றெல்லாம் அவர் இந்த விசாரணையில் தெரிவித்து இருக்கிறார். கிட்டத்தட்ட அப்ரூவர் ஆவதற்கு நிகராக பல தகவல்களை இவர் தெரிவித்தார் என்றும் கூறப்படுகிறது.
யார் இவர்
எம்டிஎம் என்ற குட்கா நிறுவனத்தின் பிரதான உரிமையாளர்தான் மாதவ ராவ். இவருக்கு சொந்தமாக சென்னையில் நிறைய கிடங்குகள் உள்ளது. இந்த குட்கா கிடங்குகள்தான் இந்த சோதனைக்கு பிள்ளையார் சுழி போட்டது. முதல் சோதனை சென்னை கிடங்கில் நடந்த போது , அதற்குள் மாதவ ராவ் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.