குட்கா விவகாரம்: ஸ்டாலின் மீது நடவடிக்கையா? ஆக.28ல் அவை உரிமைக்குழு கூடுகிறது
ஸ்டாலின் உள்ளிட்ட 20எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை: சட்டப்பேரவை உரிமைக்குழு 28ல் கூடுகிறது..!
சென்னை: குட்காவை சட்டசபைக்கு கொண்டு வந்த விவகாரத்தில் அவை உரிமை மீறல் குழு வரும் 28ல் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் கூடுகிறது.
கடந்த ஜூலை மாதம் 19ஆம் தேதி சட்டசபை கூட்டத் தொடர் நடைபெற்ற போது, எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் பேசும்போது, சென்னையில் தடை செய்யப்பட்ட குட்கா தாராளமாக விற்பனை செய்யப்படுவதாக குற்றம் சாட்டினார். அதோடு தான் கையோடு கொண்டு வந்த குட்காவையும் எடுத்துக் காட்டினார்.
இதனால் அவையில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தொடர்ந்து பேசுவதற்கு ஸ்டாலினுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
அவை உரிமைக்குழு
தடை செய்யப்பட்ட பொருளை சட்டசபைக்கு கொண்டு வந்ததாக மு.க.ஸ்டாலின் மீது சபாநாயகர் புகார் தெரிவித்தார். அத்துடன், சட்டசபைக்குள் குட்கா கொண்டு வந்த பிரச்சனை தொடர்பாக அவை உரிமை குழுவுக்கு அனுப்பப்படும் என்றும் கூறினார்.
ஸ்டாலின் மீது குற்றச்சாட்டு
இந்த நிலையில் தடைசெய்யப்பட்ட குட்காவை ஸ்டாலின் அவைக்கு எப்படி எடுத்து வரலாம்? என கேள்வி எழுப்பினார். சட்டப்படி குட்கா கையில் கிடைத்தால் அதை காவல்நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும்,மாறாக அவைக்கு குட்காவை எடுத்துவந்தது சட்டவிரோதம் என்றும் ஸ்டாலின் மீது குற்றம் சாட்டினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
ஆகஸ்ட் 28ல் உரிமைக்குழு
குட்கா போன்ற போதை பொருளை சட்டசபைக்கு எடுத்து வந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து குட்காவை பேரவைக்கு கொண்டுவந்த விவகாரத்தில் எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட 20 எம்.எல்.ஏக்கள் மீது அவை உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வரும் 28ஆம் தேதி அவை உரிமை குழு கூடுகிறது.
நடவடிக்கை பாயுமா?
அவை உரிமைக்குழு கூடி பேசி அறிக்கை தாக்கல் செய்யும் பட்சத்தில் குட்கா கொண்டு வந்த ஸ்டாலின் மீது நடவடிக்கை பாயுமா? என்பது பற்றி ஆகஸ்ட் 28ல் தெரியவரும்.