ஜெ.,வீட்டில் சசிகலா அறையில் குட்கா ஊழல் பற்றிய ரகசிய கடிதம் - வருமான வரித்துறை பகீர்
குட்கா ஊழல் தொடர்பாக டிஜிபிக்கு தாங்கள் அனுப்பிய கடிதம் சசிகலா அறையில் இருந்ததை நவம்பர் மாதம் கண்டு பிடித்தோம் என சசிகலா அறையில் சிக்கிய கடிதம் குறித்து ஐ.டி துறை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விளக்கமளி
மதுரை: குட்கா ஊழல் தொடர்பாக வருமானவரித்துறை அனுப்பிய கடிதத்தை முதல்வருக்கு டிஜிபி அசோக்குமார் அனுப்பியுள்ளார். முதல்வருக்கு அனுப்பப்பட்ட கடிதம் போயஸ் கார்டன் இல்லத்தில் சசிகலா அறையில் இருந்தது என்று வருமான வரித்துறை அதிகாரிகள் உயர்நீதிமன்றத்தில் கூறியுள்ளனர்.
மத்திய அரசின் உத்தரவைத் தொடர்ந்து தமிழகத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு குட்கா, பான் மசாலா உள்ளிட்ட பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் குட்கா, பான்மசாலா நிறுவனங்களில் வருமானவரித் துறையினர் கடந்த ஆண்டு நடத்திய சோதனையில் ரூ.250 கோடி அளவுக்கு தமிழகத்தில் சட்ட விரோதமாக குட்கா வர்த்தகம் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
குட்கா தயாரிப்பாளரான மாதவராவிடம் இருந்து பெறப்பட்ட ரகசிய குறிப்புகளில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட பலருக்கு லஞ்சம் வழங்கியதற்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது.
லஞ்சம் வாங்கிக்கொண்டு தமிழக போலீஸ் அதிகாரிகளும், இதர உயரதிகாரிகளும் சட்ட விரோதமாக குட்கா விற்பனையை ஊக்குவித்து வந்துள்ளனர்.
இது தொடர்பாக தமிழக எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின், சட்டசபையில் கேள்வி எழுப்பியுள்ளார். குட்கா சோதனையின்போது கிடைத்த ஆவணங்களை வருமான வரித் துறையினர் அப்போதைய தலைமைச் செயலாளர் ராம மோகனராவுக்கும், லஞ்ச ஒழிப்புத் துறைக்கும் அனுப்பியுள்ளனர்.
ஆனால், இந்த ஊழலில் தொடர்புடையவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, இது தொடர்பாக உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் சிபிஐ அதிகாரிகள் அடங்கிய சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க உத்தரவிட வேண்டும்.
வருமான வரித்துறை சார்பில் இன்று உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் அந்த கடிதம் பற்றி கூறப்பட்டுள்ளது. அமைச்சர் சி. விஜயபாஸ்கருக்கு லஞ்சமாக பணம் மாதவராவ் ஒப்புதல் அளித்துள்ளதாக அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வருமான வரித்துறை சார்பில் வந்த கடிதத்தை அப்போதைய முதல்வர் பொறுப்பில் இருந்தவருக்கு அனுப்பியுள்ளார் டிஜிபி அசோக்குமார். அந்த கடிதத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கடந்த நவம்பர் 17ஆம் தேதி போயஸ்கார்டனில் சசிகலா அறையில் ரெய்டு நடத்திய போது குட்கா ஊழல் பற்றிய ரகசிய கடிதம் கண்டுபிடிக்கப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குட்கா வழக்கு விசாரணை முறையாக நடப்பதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தமிழ்நாட்டை உலுக்கிய குட்கா ஊழல் தொடர்பாக தமிழகக் காவல்துறையின் லஞ்ச ஒழிப்பு பிரிவு கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது. தமிழக காவல்துறை, உணவுப் பாதுகாப்புத்துறை, சென்னை மாநகராட்சி, வணிகவரித்துறை, மத்திய கலால்துறை ஆகியவற்றில் பணியாற்றும் 17 அதிகாரிகள் மட்டுமே இந்த வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் சி. விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இப்போதும் எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.