குட்காவுக்கு லஞ்சம்.. நேர்மையான அதிகாரி என ஹைகோர்ட் பாராட்டிய ஜெயக்கொடி திடீர் மாற்றம்
நேர்மையான விசாரணை என ஹைகோர்ட் நீதிபதியால் பாராட்டப்பட்ட குட்கா ஊழல் விசாரணை அதிகாரி ஜெயக்கொடி திடீரென மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை : குட்கா ஊழலை விசாரிக்கும் அதிகாரி ஜெயக்கொடி நேர்மையாக விசாரித்து வருகிறார் என்று ஹைகோர்ட் மதுரை கிளையால் பாராட்டு பெற்ற நிலையில் இன்று அவர் வேறு துறைக்கு மாற்றப்பட்டு விட்டார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் குட்கா, பான் பொருள்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதையும் மீறி குட்கா விற்பனை அமோகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் குட்கா குடோனில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு சிக்கிய டைரி ஒன்றில் குட்கா விற்பனையை கண்டுக் கொள்ளாமல் இருக்க ஒன்றில் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், சென்னை போலீஸ் ஆணையராக இருந்த ஜார்ஜ் ஆகியோருக்கு ரூ.40 கோடிக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
தமிழக அரசுக்கு உத்தரவு
இந்நிலையில் இந்த குட்கா ஊழல் தொடர்பாக சென்னை ஹைகோர்ட் மதுரை கிளையில் ஒரு பொது நலன் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, குட்கா ஊழல் குறித்து விசாரணை அதிகாரியை வைத்து விசாரணை நடத்த தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.
ஆகஸ்ட் மாதம் நியமனம்
அதன்படி தமிழ்நாடு மின் நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக இருந்து வி.கே.ஜெயக்கொடி, லஞ்ச ஒழிப்பு மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்கள் துறை ஆணையராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நியமிக்கப்பட்டார்.
இன்று ஜெயக்கொடி மாற்றம்
குட்கா ஊழல் வழக்கு விசாரணை நேற்று ஹைகோர்ட் மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தபோது நேர்மையான விசாரணை என நீதிபதியால் ஜெயக்கொடி பாராட்டப்பட்டார். இந்நிலையில் குட்கா ஊழல் கண்காணிப்பு ஆணையராக இருந்து ஜெயக்கொடி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பாராட்டு பெற்றவர் ஜெயக்கொடி
அவருக்கு பதிலாக மோகன் பியாரேவை குட்கா ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜெயக்கொடி நேர்மையாக விசாரிக்கிறார் என்று நீதிமன்றத்தாலேயே பாராட்டு பெற்ற நிலையில் தற்போது மாற்றப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.