”புல்” போதையில் வந்து வகுப்பறையில் உருளும் ஹெ.எம் - அரியலூர் அரசுப் பள்ளியில்!
திருச்சி: அரியலூர் மாவட்டம் சித்துடையார் கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றுபவர் தினமும் மது அருந்திவிட்டு வகுப்பறைக்கு வருவதாகப் புகார் எழுந்துள்ளது.
இப்பள்ளியின் தலைமையாசிரியராக உள்ள தமிழாசிரியர் தமிழண்ணா, தினமும் குடித்து விட்டு வகுப்பறைக்கு வருவதாகவும், போதையில் வகுப்பறையிலேயே படுத்து உருள்வதாகவும் மாணவியர் குற்றம் சாட்டியுள்ளனர்.
அதோடு, தனது நண்பர்களையும் அழைத்து வந்து பள்ளியிலேயே குடிப்பதாகவும் கூறியுள்ளனர். இவரது மனைவி அலமேலுவும் இதே பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது.
தலைமையாசிரியர் தமிழண்ணா குறித்து உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ராசாத்தியிடம் கேட்டபோது, விசாரணை நடத்தப்படுவதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் தெரிவித்துள்ளார். மாணவர்களுக்கு நல்லொழுக்கம் பேண வேண்டிய ஒரு ஆசிரியரே இப்படி நடந்துகொள்வது அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.