மக்களை முட்டுச்சந்துக்குள் ஓடவைப்பது மட்டுமே இவர்களின் நோக்கமா?
Recommended Video
சென்னை: தமிழகத்தில் உள்ள பிரச்சினைகளை திசை திருப்பி மக்களை முட்டுச்சந்துக்குள் ஓட வைப்பதே எச் ராஜா போன்ற பாஜக தலைவர்களின் நோக்கமாக உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டது போல் தமிழகத்திலும் பெரியார் சிலைகள் அகற்றப்படும் என்று எச் ராஜா தனது பேஸ்புக்கில் பதிவை வெளியிட்டார்.
இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனால் அவரது உருவபொம்மையை எரித்து ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்றன.
அட்மின் மீது பழி
இதுகுறித்து எச் ராஜா விளக்கம் அளித்த போது பெரியார் சிலை உடைப்பு குறித்த பதிவு தம்முடையது இல்லை என்றும் அதை தனது அட்மின் தான் பதிவிட்டிருந்தார் என்றும் தெரிவித்தார். இதை யாரும் ஏற்கவில்லை. பெரியார் குறித்து கருத்துகளை பதிவிட்டால் என்ன நடக்கும் என்று தெரிந்திருந்தும் இதுபோன்று ஒரு கருத்தை எப்படி அவரது அட்மின் வெளியிட்டார் என்ற கேள்வி எழுந்தது.
சனியன் என்ற கருத்து
இந்த சர்ச்சையே இன்னும் அடங்கவில்லை, அதற்குள் மற்றொரு சர்ச்சைக்குள் சிக்கிவிட்டார் எச் ராஜா. இன்றைய தினம் ஒட்டன்சத்திரத்தில் எச் ராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில் தமிழ் மொழியை தந்தை பெரியார் சனியனே என்று கூறியதாக தெரிவித்துள்ளார்.
எதற்காக சர்ச்சை
எச் ராஜாவை கைது செய்ய வேண்டும் என்று தமிழக கட்சிகள் கொந்தளித்து வருகின்றன. இந்நிலையில் மீண்டும் மீண்டும் நாவடக்கம் கொள்ளாமல் மீண்டும் மீண்டும் ராஜா சர்ச்சையில் சிக்குவதை பார்க்கும்போது மக்கள் அங்கிட்டு இங்கிட்டு எங்கு நகரவிடாமல் தடுப்பதற்காகத்தான் இந்த சர்ச்சைகளா என்ற கேள்வி எழுந்துள்ளது.
காவிரி மேலாண்மை
தமிழகத்தில் ஏராளமான பிரச்சினைகளுக்காக மக்கள் போராடி வருகின்றன. அதில் நீட் தேர்வு, விவசாயிகள் பிரச்சினை, மீனவர்கள் பிரச்சினை, ஹைட்ரோ கார்பன் திட்டம் என பிரச்சினைகள் ஆஞ்சநேயர் வால் போல் நீண்டு கொண்டே செல்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக சுப்ரீம் கோர்ட் விதிக்கப்பட்ட கெடு முடிய இன்னும் இருவாரங்களே உள்ளன.
எம்பிக்கள் வலியுறுத்தல்
தமிழகத்தில் காவிரி பிரச்சினை தலைவிரித்தாடுகிறது. மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று கோரி நாடாளுமன்றத்தில் தமிழக எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழர்கள் காவிரி விவகாரத்தில் கவனத்தை செலுத்தாத வண்ணம் எச் ராஜா போன்ற தமிழக அரசியல்வாதிகள் மூலம் தடுக்க சதி நடக்கிறதோ என்ற எண்ணம் உருவாகியுள்ளது.
முட்டுச்சந்துக்குள்
மக்களை குழப்பி இதுபோன்ற போராட்டங்கள் மூலம் அவர்களை முட்டுச்சந்துக்குள் ஓட வைப்பதே மத்திய அரசின் பிளானாக இருக்கலாம் என எண்ணுவதில் என்ன தவறு உள்ளது? ஏற்கெனவே ராஜா கொளுத்தி போட்ட பிரச்சினைக்கு தீர்வு காணாத நிலையில் தற்போது மீண்டும் மீண்டும் பிரச்சினைகளை உருவாக்குவதை பார்த்தால் சந்தேகம் கொள்ளாமல் யாரும் இருக்க முடியாது.
இவர்களும் தலைவர்கள்
வாஜ்பாய் போன்ற நல்ல தலைவர்களை கொண்ட பாஜகவில் இப்படி மக்களை குழப்பும் செயலில் ஈடுபடுவதற்கு ராஜா போன்ற தலைவர்கள் இருக்கிறார்கள் என்பதை பார்க்கும் போது வேதனையாக உள்ளது. அதுவும் அவர்கள் தமிழகத்தில்தான் வசிக்கிறார்கள் என்பதை எண்ணும் போது மனம் விம்முகிறது.