வீரம் இல்லாத வீரமணி... திருட்டுத்தனமாக தாலி அகற்றும் நிகழ்ச்சி : ஹெச்.ராஜா, ராம.கோபாலன் கண்டனம்!
சென்னை: திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற தாலி அகற்றும் நிகழ்ச்சி திருட்டுத் தனமாக நடந்தது என பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
அம்பேத்கரின் 125-வது பிறந்தநாளையொட்டி, திராவிடர் கழகம் சார்பில் தாலி அகற்றிக் கொள்ளும் நிகழ்ச்சியும், அதை தொடர்ந்து, மாட்டுக் கறி உண்ணும் நிகழ்ச்சியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். உயர்நீதிமன்ற உத்தரவுடன் போலீஸ் பாதுகாப்போடு தாலி அகற்றும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
உயர்நீதிமன்ற உத்தரவினை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டதை அடுத்து வழக்கு விசாரணை நடைபெறும் முன்பாகவேது இன்று காலை 7 மணிக்கு பெரியார் திடலில் திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி தலைமையில் தொடங்கிய தாலி அகற்றும் நிகழ்ச்சி 10 மணிக்குள்ளாகவே நடத்தி முடிக்கப் பட்டது.
இது தொடர்பாக தகவல் அறிந்த இந்து முன்னணி மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் ஆங்காங்கே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எழும்பூரில் தாளமுத்து நடராசன் மாளிகை அருகில் இந்து முன்னணியினர் 50 பேர் போராட்டம் நடத்த வந்தனர். அவர்களுடன் சேர்ந்து போராட்டம் நடத்துவதற்காக பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவும் அங்கு வந்தார்.
போராட்டம் தொடர்பாக தகலறிந்து விரைந்து வந்த போலீசார், ‘தாலி அகற்றும் நிகழ்ச்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை பிறப்பித்துள்ளதாக' தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து போலீசார் கேட்டுக் கொண்டதிற்கிணங்க ஹெச்.ராஜாவும், இந்து முன்னணியினரும் போராட்டம் நடத்தவில்லை.
போராட்டத்தில் பங்கேற்பதற்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்தார் ஹெச்.ராஜா. அப்போது அவர், ‘தி.க.சார்பில் நடத்தப்பட்ட தாலி அகற்றும் நிகழ்ச்சி கடும் கண்டனத்துக்கு உரியது. இதில் குடும்பப் பெண்கள் யாரும் பங்கேற்கவில்லை. 10 மணிக்கு நிகழ்ச்சி நடத்துவதாக அறிவித்துவிட்டு முன்கூட்டியே காலை 7 மணிக்கே நிகழ்ச்சி நடத்தியுள்ளனர். திருட்டுத்தனமாக நடைபெறும் திருமணங்களைத்தான் நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால், திருட்டுத்தனமாக தாலி அகற்றும் நிகழ்ச்சி நடத்திய கி.வீரமணியைக் கண்டிக்கிறேன்' என்றார்.
வீரம் இல்லாத வீரமணி:
இந்த தாலி அகற்றும் நிகழ்ச்சி தொடர்பாக இந்து முன்னணி மாநில அமைப்பாளர் ராம. கோபாலன் கூறுகையில், ‘வீரம் இல்லாத வீரமணி நான்கு சுவர்களுக்குள் வைத்து நடத்திய நிகழ்ச்சியை பொது இடத்தில் வைத்து நடத்த தயாரா? ஏதாவது ஒரு குடிசை பகுதிக்குச் சென்று இந்த நிகழ்ச்சியை நடத்தி பார்க்கட்டும். அப்போது ஏற்படும் பின்விளைவுகள் என்ன என்பது தெரியும்' எனத் தெரிவித்தார்.