எச். ராஜா சுளீர் பேச்சு... சென்னை ஹைகோர்ட் என்ன செய்யப் போகிறது?
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தை மிக மோசமாக, நடுத் தெருவில் நின்று கொண்டு எச். ராஜா மீது சென்னை ஹைகோர்ட் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?. மிகக் கடுமையான நடவடிக்கையை எச். ராஜா மீது எடுத்து ஒட்டுமொத்த அநாகரீகத் தலைவர்களுக்கும் முடிவு கட்டுமா ஹைகோர்ட் என்ற பெரும் எதிர்பார்ப்பு தமிழக மக்களிடையே எழுந்துள்ளது.
காவல்துறை எச். ராஜா மீது நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கவே முடியாது. ஏன் என்றால் நம் கண் முன்புதான் எஸ்.வி.சேகர் என்ற மிகப் பெரிய முன்னுதாரணம் இருக்கிறதே. அவ்வளவு ஏன், எச். ராஜாவின் நிழலைக் கூட தொட முயற்சிக்க மாட்டார்கள் என்பது நிதர்சனம். ஏனென்றால் எச். ராஜா போன்றவர்களுக்கு காக்கும் தெய்வங்கள் ஏராளம் உண்டு.
ஒரு தேசியக் கட்சியின், மோடி போன்ற ஆளுமையின் ஆட்சியைக் கொண்ட ஒரு கட்சியின், தேசிய செயலாளர் என்ற மிகப் பெரிய பொறுப்பில் உள்ள ஒருவர் எச். ராஜா. இன்று ஹைகோர்ட்டை "ம.." என்று கூறி விட்டார். இதை விட மிகப் பெரிய அவமரியாதையை நீதிமன்றங்களுக்கு ஏற்படுத்தி விட முடியாது. உச்சகட்ட அவமரியாதை இது. இதுபோல இதுவரை யாரும் உயர்நீதிமன்றத்தை பகிரங்கமாக பொது வெளியில் இத்தனை கேவலமாக விமர்சித்ததில்லை.
ஒரு வழக்கு கூட போடவில்லையே
இதற்கே இந்நேரம் அவரை தூக்கி உள்ளே போட்டிருக்க வேண்டும்.. விசாரணையே தேவையில்லை. ஆனால் காவல்துறை எதுவும் செய்யவில்லை. குறைந்தபட்சம் வழக்காவது பதிவு செய்யப்பட்டிருக்கிறதா என்றும் தெரியவில்லை. உண்மையில் பாஜகவுக்கு மிகப் பெரிய அவமானத்தை கொடுத்துள்ளார் எச். ராஜா. பாஜகவை நிரந்தரமாக மக்களிடமிருந்து பிரித்துக் கொண்டு போகும் வேலை இது. பாஜக என்றால் அடாவடி என்ற புதிய அத்தியாயத்தை எச். ராஜா போன்றவர்கள் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.
அமைதியாக வேடிக்கை
உண்மையில் எச். ராஜா உயர்நீதிமன்றத்தை அவமதித்ததை அங்கிருந்த காவல்துறையினர் தடுக்கவில்லை. எனவே அவர்கள் ராஜா பேச்சை மறைமுகமாக வழிமொழிந்துள்ளனர் என்றுதான் கருத வேண்டியுள்ளது. எச். ராஜா மட்டுமல்ல. அவர் பேசியதைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்த காவல்துறையினரும் கூட உயர்நீதிமன்ற அவமதிப்பில் சிக்குவார்கள்.
எஸ்வி சேகரை அடக்கியிருந்தால்
இப்போது பந்து உயர்நீதிமன்றத்திடம்தான் உள்ளது. எஸ்.வி.சேகர் விவகாரத்திலேயே உயர்நீதிமன்றம் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு இரும்புக் கரம் கொண்டு எஸ்.வி.சேகர் வழக்கை கையாண்டிருந்தால் எச். ராஜா போன்றவர்கள் வெளியில் வரவே கூட யோசித்திருக்கும் நிலை உருவாகியிருக்கும்.
மக்கள் மீதுதான் பாயத் தெரியும்
மக்கள் பிரச்சினைக்காக குரல் கொடுத்த, போராடிய எத்தனையோ பேரை மிகக் கொடுமையான சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது காவல்துறை. நீதிமன்றங்கள் விடுவித்தாலும் கூட விடாமல் வேறு வேறு வழக்குகளைப் போட்டுக் கைது செய்கிறது. ஆனால் இன்று எச். ராஜா அதே காவல்துறையை நடு ரோட்டில் வைத்து காறி உமிழ்ந்துள்ளார். ஆனாலும் அவர் மீது நிச்சயம் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை. எடுக்காது (அத்தனை பேசுகிறார், அவரைப் போய் அண்ணாச்சி, அண்ணாச்சி என்று கெஞ்சும் அதிகாரிகளைப் பார்த்தாலே தெரிகிறதே)
மிகக் கடுமையாக தண்டிக்க வேண்டும்
எச். ராஜா போன்றவர்கள் மீது உயர்நீதிமன்றம்தான் கடுமையான நடவடிக்கையை கையில் எடுக்க வேண்டும். மதத்தையும், அதிகாரத்தையும் கேடயமாக வைத்துக் கொண்டு இஷ்டத்திற்கு பேசுபவர்களை, பிறரது மனதை புண்படுத்துபவர்களை, வரம்பு மீறி பேசுவோர்களை கடுமையாக தண்டிப்பதன் மூலம் நாட்டுக்கே ஒரு பாடம் கற்றுக் கொடுக்க வேண்டும் சென்னை உயர்நீதிமன்றம். இனியும் ஒரு எஸ்.வி.சேகர், எச். ராஜா உருவாக விடாமல் தடுக்கும் வகையில் மிகக் கடுமையான நடவடிக்கையாக உயர்நீதிமன்றத்திடமிருந்து மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
அடாவடி பேர்வழிகள்
அடாவடித்தனமாக செயல்படும் - பாஜக என்று இல்லை, யாராக இருந்தாலும் சரி - அரசியல்வியாதிகளை கடுமையான நடவடிக்கை மூலம் ஒடுக்கி அடக்க நீதிமன்றம் மட்டுமே சரியான இடம் என்பது அப்பாவி மக்களின் எதிர்பார்ப்பு. செய்யுமா சென்னை உயர்நீதி்மன்றம்?