ஓட்டு மெசின்ல முறைகேடு செய்தால் 70 சீட்டை எப்படி விட்டுக்கொடுப்போம்? - எச். ராஜா
சென்னை: இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் உழைப்புக்கு வெற்றி கிடைத்துள்ளது என்று எச்.ராஜா கூறியுள்ளார். மேலும் பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி அமலுக்கு பிறகு கிடைத்த வெற்றி 2019 நாடாளுமன்ற தேர்தலிலும் தொடரும் என்றும் அவர் கூறியுள்ளார்.
குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களின் சட்டசபை தேர்தல் முடிவுகள் பாஜகவிற்கு சாதகமாக அமைந்துள்ளன.
இரு மாநிலங்களிலும் பாஜக வெற்றிவாகை சூடிய நிலையில் காங்கிரஸ் கட்சி தலைவர்களும், ஹர்திக் படேலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்திருப்பதாக குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா, குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் பாஜகவுக்குக் கிடைத்த வெற்றியால் 2019ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் எந்த திசையை நோக்கி செல்கிறது என்பதில் மக்களிடம் தெளிவு பிறந்துள்ளது என்று கூறினார்.
இந்த தேர்தலின் வெற்றி ஜாதி மற்றும் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக அமைவதாகவும் எச்.ராஜா தெரிவித்தார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறியுள்ளனர். ஆனால் அப்படி முறைகேடு செய்தால் 70க்கும் மேற்பட்ட இடங்களை எப்படி விட்டுக்கொடுத்திருப்போம் என்று கேள்வி எழுப்பினார்.