அரசு பணத்தை ஆட்டைய போட்ட ஹெச். ராஜா அண்ணன்... ரிட்டையர்டு நாளில் சஸ்பென்ட்!
அரசு போக்குவரத்துக் கழக கணக்குகளில் முறைகேடு செய்ததாக பாஜகவின் மூத்த தலைவர் ஹெச். ராஜாவின் அண்ணன் சுந்தர் ஓய்வு பெறுவதற்கு முதல் நாள் அதிரடியாக சஸ்பென்ட் செய்யப்பட்டார்.
தஞ்சாவூர்: கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழக கணக்குகளில் கையாடல் செய்து பணத்தை சுருட்டிய பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலர் ஹெச். ராஜாவின் அண்ணன் சுந்தர் ஓய்வு பெறுவதற்கு முதல் நாளில் அதிரடியாக சஸ்பென்ட் செய்யப்பட்டார்.
கும்பகோணம் அரசு தலைமை போக்குவரத்து கழக அலுவலகத்தில் கணக்காளராகப் பணிபுரிந்தவர் ஹெச். ராஜாவின் அண்ணன் சுந்தர். கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை அவர் கணக்காளராக பணிபுரிந்தார்.
அண்ணன் சுந்தர் மீது வழக்கு
சுந்தர் தமது பணிகாலத்தின் போது அரசு பணத்தை சுருட்டி முறைகேடு செய்தார்; போலியான கணக்குகளை காண்பித்தார் என்பது புகார். இதையடுத்து அதிமுக ஆட்சிக் காலத்தில் சுந்தர் மீது வழக்கு தொடரப்பட்டது.
ஜூனியர் மேலாண்மை இயக்குநர்
2011-ம் ஆண்டுக்குப் பின்னர் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் சுந்தர் பணிபுரிந்தார். கடைசியாக போக்குவரத்து வளர்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தில் ஜூனியர் மேலாண்மை இயக்குநராக இருந்தார்.
திடீர் சஸ்பென்ட்
இந்த நிலையில் கடந்த மார்ச் 31-ந் தேதி சுந்தர் பணி ஓய்வு பெற வேண்டும். ஆனால் பணத்தை சுருட்டி முறைகேடு செய்த வழக்கு நிலுவையில் இருந்ததால் ஓய்வு பெறும் நாளுக்கு முதல் நாள் மார்ச் 30-ந் தேதி அதிரடியாக அவர் சஸ்பென்ட் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துவேசவாதி
தம்மை கேள்வி கேட்கும் செய்தியாளர்கள் உட்பட அனைவரையுமே தேசதுரோகி என ஏக வசனத்தில் விமர்சிப்பவர் ஹெச்.ராஜா. மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கும் துவேச கருத்துகளை வெளியிட்டு தம்மை உத்தமராக காட்டிக் கொள்பவர் ஹெச். ராஜா என்பது குறிப்பிடத்தக்கது.