விஜய் குடும்பத்தை விடாமல் வம்பிழுக்கிறாரே எச்.ராஜா!
விஜய் குடும்பத்தினர் மதமாற்ற சதியில் ஈடுபட்டுள்ளதாக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
சென்னை: மகன் சினிமாவில் கோயில் கட்டாதே என்பார், தந்தையோ திருப்பதியில் செலுத்தும் காணிக்கை லஞ்சம் என்பார், இதுவே அவர்களின் மதமாற்ற சதி என்று விஜய் குடும்பத்தினரை பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா விடாமல் வம்பிழுத்து வருகிறார்.
மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து விஜய் பேசிய வசனங்களுக்கு தமிழக பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த காட்சிகளை நீக்குமாறும் கூறியிருந்தனர். ஆனால் அதை தயாரிப்பு நிறுவனத்தினர் மறுத்துவிட்டனர்.
விஜய்யின் மெர்சல் படத்துக்கும் அவரது வசனத்துக்கும் மக்கள் ஆதரவு பெருகியது. இதையடுத்து ஜோசப் விஜய்க்கு பிரதமர் மோடி மீதான வெறுப்பே மெர்சல் திரைப்படம் என்று எச்.ராஜா கூறி ஜாதி பிரச்சினை கிளப்பி அவரது வாக்காளர் அடையாள அட்டை வரை தோண்டியெடுத்தார்.
பெயர் முக்கியமல்ல
ஜோசப் விஜய்யாக இருந்தால் என்ன விஜய்யாக இருந்தால் என்ன எங்களுக்கு எல்லாம் ஒன்றுதான் என்று கூறிய ரசிகர்கள் சாதாரண வசனத்துக்காக விஜய்யின் வாக்காளர் அட்டை வரை வேலை பார்த்திருக்கும் எச்.ராஜாவுக்கு பல்வேறு கண்டனங்கள் எழுந்தன.
விஜய் வசனம்
மெர்சல் படத்தில் விஜய் கோயில் கட்ட வேண்டாம் என்றும் அதற்கு பதில் மக்களுக்கு பயனுள்ள மருத்துவமனையை கட்டலாம் என்ற அர்த்தத்தில் விஜய் வசனம் பேசியிருப்பார். இது இந்துக்களை புண்படுத்தியதாக எச்.ராஜா கொந்தளித்தார்.
நண்டு கொழுத்தால்...
விஜய்யின் தந்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசிய வீடியோ தனது டுவிட்டரில் போட்ட எச்.ராஜா, நண்டு கொழுத்தால் வலையில் தங்காது. இன்று தனக்கு ஜாதி இல்லை மதம் இல்லை, நாங்கள் தமிழர்கள் மனிதர்கள் என்கிற கிறித்தவ மதமாற்றும் சக்திகளின் கோரமுகம் இதோ. நாம் ஏழுமலையானுக்கு செலுத்தும் காணிக்கை லஞ்சமாம். இந்துக்களே இனியும் நாம் ஏமாறப் போகிறோமா? ரசிகர் மன்றம் கலைப்போம், இந்துவாக இணைவோம் என்று நேற்று கருத்து பதிவிட்டிருந்தார்.
|
திட்டமிட்ட சதி
இந்நிலையில் விடாது கருப்பாய் இன்றும் விஜய்யையும் அவரது தந்தையையும் எச்.ராஜா டுவிட்டரில் வம்பிழுத்துள்ளார். அவரது பதிவில் மகன் சினிமாவில் புதிதாக கோவில் காட்டாதே என்பார். தந்தை ஏற்கெனவே உள்ள கோவிலில் செலுத்தும் காணிக்கையை லஞ்சம் என்பார். இந்துவே இந்த மதமாற்ற குடும்பத்தின் திட்டமிட்ட சதியை புரிந்துகொள் என்று எச்.ராஜா கூறியுள்ளார். இதற்கும் ரசிகர்கள் ராஜாவுக்கு கடும் கண்டனங்கள் பதிவு செய்து வருகின்றனர்.