தமிழக பாஜகவில் சலசலப்பு- தமிழிசையை 'பேய்' என எச்.ராஜா ஆதரவாளர் கல்யாண் ராமன் விமர்சனம்
பெரியார் சிலையை சேதப்படுத்திய முத்துராமனை பாஜகவில் இருந்து நீக்கியதற்கு எச். ராஜா ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
Recommended Video
சென்னை: தமிழக பாஜகவில் இருந்து பெரியார் சிலையை உடைத்த முத்துராமனை நீக்கியதற்கு எச்.ராஜாவின் தீவிர ஆதரவாளர் கல்யாண் ராமன் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்,
தமிழக பாஜக தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டதை தொடக்கம் முதலே ஒரு பிரிவினர் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். தமிழிசையை தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என அப்பிரிவினர் தொடர்ந்து லாபி செய்து வருகின்றனர்.
ஆனால் டெல்லி மேலிடமோ தமிழிசை சவுந்தராஜனுக்கு ஆதரவாக இருக்கிறது. ஆர்.கே.நகர் தேர்தலின் போது தமிழிசைக்கு அந்த பிரிவினர் ஒத்துழைக்கவில்லை. ஆனால் தேர்தல் முடிந்த பிறகு கேவலமான தோல்விக்கு தமிழிசையே காரணம் என டெல்லியில் புகார் வாசித்தனர். தமிழிசையோ என்ன நடந்தது? யார் யார் எப்படி முறைத்துக் கொண்டிருக்கிறார்கள்? என டெல்லியிடம் விவரித்தார். இதையடுத்து தமிழிசைக்கு எதிரான பிரிவினருக்கு டெல்லி தலைமை டோஸ் விட்டது.
முத்துராமன் நீக்கம்
இந்நிலையில் தந்தை பெரியார் சிலை விவகாரத்தில் திருப்பத்தூர் பிரமுகர் முத்துராமனை பாஜகவில் இருந்து தமிழிசை சவுந்தரராஜன் அதிரடியாக நீக்கினார். இதனை முன்வைத்து தற்போது மீண்டும் தமிழிசைக்கு எதிரான பிரிவினர் சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.
பேய் என விமர்சனம்
எச். ராஜாவின் தீவிர ஆதரவாளரும் ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்துவை ஆபாசமாக விமர்சித்தவருமான கல்யாண் ராமன் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் "பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்..." என்ற தலைப்பில் பதிவிட்டுள்ளதாவது:
காங்கிரசாரை நீக்கனும்
முத்துராமனை நீக்கியது கடைந்தெடுத்த முட்டாளத்தனம்னு நான் சொல்ல விரும்பினாலும், அப்படி சொன்னால் நானும் நீக்கப்படுவேன் என்பதால் அதை சொல்லாமல் தவிர்க்கிறேன்... பாஜகவில் பாஜகவினர் இருக்க வேண்டும், கட்சி வளர வேண்டும் என்றால், பாஜகவில் உள்ள காங்கிரசார் தான் முதலில் நீக்கப்பட வேண்டும்னும் சொல்ல தோணுது... ஆனா அதை சொன்னாலும் பிரச்சனை என்பதால் அதையும் நான் சொல்லல...
பேய் அரசாண்டால்...
பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள் அப்படின்னு பாரதி சொன்னதை சொல்லி காட்டனும்னு தோணுது... இந்த பாழாய் போன பயம் வந்து சொல்லாமல் தடுக்குது... கட்சி, பதவி என்பது பாருங்க எவ்ளோ பெரிய பயமுறுத்தும் ஆயுதமா இருக்கு...
குமரி அனந்தனை வைத்து கிண்டல்
எங்க அக்கா மாதிரி சிறந்த தலைவி உலகில் இல்லை என்ற இறுதியான, உறுதியான சொல்லை சொன்னால் தான் நான் தப்பிக்க முடியும் என்ற காரணத்தால், தென்னகத்து ஜான்சிராணியின் இந்த செயல் வரவேற்கத்தக்கது என கூறி, எங்க அக்காவுக்கு எனது சிரம் தாழ்த்திய வணக்கங்களையும், அவங்க நயினாவை நோக்கி, காங்கிரசும், காங்கிரசின் வழித்தோன்றல்களும் வாழ்கன்னும் கூவிக்கொண்டு விடைபெறுகிறேன்... நன்றி வணக்கம்...
தமிழிசை- பெரியார், பிரபாகரனின் பக்தை
(எங்க அக்கா பெரியார், பிரபாகரனின் பக்தை என்பது நிறைய பேருக்கு தெரியாது. அது பற்றி தனியே எனது அனுபவத்தை எழுதுகிறேன்)
இவ்வாறு கல்யாண் ராமன் பதிவிட்டுள்ளார்.