ஆளுநர் மாளிகைக்கு விசிட்.. அப்படியே விஷாலுக்கு குட்டு, விஜய்க்கு திடீர் ஷொட்டு.. எச்.ராஜா பல்டி!
மெர்சல் பட விவகாரத்தில் தேசிய தலைவர்களுக்கு நன்றி தெரிவித்த நடிகர் விஜய்க்கு நன்றி என்று ராஜா தெரிவித்தார். அதேநேரம், உப்பு தின்றவர் தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும் என்று விஷாலுக்கு மறைமுகமாக கண்டனத
சென்னை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை, ராஜ்பவனில், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
சந்திப்புக்கு பிறகு ஆளுநர் மாளிகைக்கு வெளியே நிருபர்களுக்கு எச்.ராஜா அளித்த பேட்டியில், ஆளுநருடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று அவர் கூறினார்.
விசாலுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியதில் பாஜகவுக்கு எந்த பங்கும் இல்லை என்று தெரிவித்தார்.
உப்பு தின்றார்
அதேநேரம், உப்பு தின்றவர் தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும் என்று விஷாலுக்கு மறைமுகமாக கண்டனத்தை அவர் பதிவு செய்தார். ஏற்கனவே ரெய்டு நடைபெற்றபோதும், ராஜா இவ்வாறு கூறியிருந்தார்.
விஜய்க்கு ஷொட்டு
மெர்சல் பட விவகாரத்தில் தேசிய தலைவர்களுக்கு நன்றி தெரிவித்த நடிகர் விஜய்க்கு நன்றி என்று ராஜா தெரிவித்தார். அவர் ஏன் திடீரென விஜய்க்கு நன்றி தெரிவித்தார் என்பது புரியாத புதிராகவே உள்ளது.
கந்துவட்டி கருத்து
மேலும், ஆன்மீக நம்பிக்கை இருந்திருந்தால் இசக்கிமுத்து குடும்பத்துடன் தீக்குளித்திருக்க மாட்டார். இவ்வாறு எச்.ராஜா தெரிவித்தார். நெல்லையில் கந்துவட்டி பிரச்சினைக்காக குடும்பத்தோடு தீக்குளித்த இசக்கி முத்து இன்று பலியானார். எனவே அந்த சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது.
விஜய் சொன்னது ராகுலுக்கு
விஜய் தனது நன்றி அறிவிப்பு அறிக்கையில், தேசிய தலைவர்களுக்கு நன்றி என கூறியிருந்தார். காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்திதான், மெர்சலுக்கு ஆதரவாக குரல் கொடுத்த தேசிய அரசியல் கட்சி தலைவராகும் என்பது குறிப்பிடத்தக்கது.