கார்ட்டூனிஸ்ட் பாலா மீதான நடவடிக்கை நியாயமானதே... சொல்வது எச். ராஜா!
கார்ட்டூனிஸ்ட் பாலா மீதான நடவடிக்கை நியாயமானது என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
சென்னை: தீக்குளிப்பு சம்பவத்தை கண்டிக்கும் வகையில் கார்ட்டூன் வரைந்த பாலா மீது நடவடிக்கை எடுத்தது சரியானது என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா நியாயப்படுத்தியுள்ளார்.
நெல்லை மாவட்டம் காசிதர்மத்தைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து. கந்து வட்டியால் அவதிப்பட்ட இவர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல் துறை, நெல்லை ஆட்சியரிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை.
இதனால் விரக்தி அடைந்த இசக்கி முத்து, தன் மனைவி, இரு சின்னஞ்சிறு குழந்தைகளுடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதை தொலைகாட்சியில் பார்த்தவர்களில் கல்நெஞ்சம் கூட கரையும் அளவுக்கு இருந்தது.
இசக்கி முத்துவின் புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் ஒரு குடும்பமே கருகியதை குறிக்கும் வகையில் கார்ட்டூனிஸ்ட் பாலா கார்ட்டூன் வரைந்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியரின் புகாரின் பேரில் பாலா கைது செய்யப்பட்டார்.
இதற்கு பலர் கண்டனம் தெரிவித்தனர். ஊரே கண்டனம் தெரிவிக்கும் பாலா கைது நடவடிக்கை சரியே என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா நியாயப்படுத்தியுள்ளார்.
கேலிச்சித்திரம் என்கிற பெயரில் விரசமாக கார்ட்டூன் வரைவது கண்டிக்கத்தக்கது. விரசபடம் வரைந்த பாலா விற்கு எதிரான நடவடிக்கை நியாயமானதே
— H Raja (@HRajaBJP) November 6, 2017
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் கேலிச்சித்திரம் என்கிற பெயரில் விரசமாக கார்ட்டூன் வரைவது கண்டிக்கத்தக்கது. விரசபடம் வரைந்த பாலா விற்கு எதிரான நடவடிக்கை நியாயமானதே என்று குறிப்பிட்டுள்ளார்.