பாரதிராஜா, வைரமுத்து, திருமா... இவங்க மீதும் கொலை முயற்சி வழக்கு போடுங்க: அடங்க மறுக்கும் எச் ராஜா
பாரதிராஜா, வைரமுத்து, திருமாவளவன், அமீர் ஆகியோர் மீதும் கொலை முயற்சி வழக்கு போட வேண்டும் என்று எச் ராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை: சீமான் மீது மட்டுமல்லாமல் பாரதிராஜா, வைரமுத்து, திருமாவளவன், அமீர் ஆகியோர் மீதும் கொலை முயற்தி வழக்குகளை பதிவு செய்ய வேண்டும் என்று பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என கோரி தமிழகத்தில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடத்த அட்டவணை வெளியிடப்பட்டது.
இதை வேறு மாநிலத்துக்கு மாற்ற கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் ஐபிஎல் நிர்வாகமோ சென்னையில் திட்டமிட்டபடி அந்தந்த தேதிகளில் நடக்கும் என்று திட்டவட்டமாக தெரிவித்தது.
போராட்டம்
இதையடுத்து கடந்த 10-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முதல் போட்டி நடைபெற்றது. இதை கண்டித்து அண்ணா சாலையில் புரட்சி போராட்டம் வெடித்தது. இதில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர், பாரதிராஜா, வைரமுத்து உள்ளிட்ட தமிழ் அமைப்பினர், நாம் தமிழர் கட்சியினர் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவலர் புகார்
அப்போது மைதானத்துக்குள் உள்ளே விட மறுத்த காவல் ஆய்வாளர் மற்றும் இரு போலீஸ்காரர்களை நாம் தமிழர் கட்சிக் கொடி ஏந்திய கும்பல் தாக்கியதாக அந்த காவலர்கள் புகார் கொடுத்தனர்.
ராஜா காதில் போட்டு கொள்ளவில்லை
இதையேற்று சீமான் உள்பட 10 பேர் மீது கொலை முயற்சி வழக்கு உள்ளிட்ட 10 வழக்குகள் போடப்பட்டுள்ளன. இந்நிலையில் வழக்கம் போல் எச் ராஜா ஏடாகூடாமான கருத்தை தெரிவித்துள்ளார். இவருக்கு ஒவ்வொரு முறையும் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிடும் போதெல்லாம் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்கின்றனர். எனினும் ராஜா அதை காதில் போட்டுக் கொள்வதில்லை.
|
எச் ராஜாவின் ஐடியா
இதுகுறித்து இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் ராஜா கூறுகையில் ஐ.பி.எல் க்கு எதிரான போராட்டம் என்று வன்முறையை தூண்டி பேசியவர் சீமான் மட்டுமல்ல. வைரமுத்து, பாரதிராஜா, கொளதமன், அமீர், திருமுருகன்காந்தி, திருமாவளவன் அனைவருமே ஆகும். எனவே கொலை முயற்சி வழக்கு இவர்கள் அனைவர் மீதும் தொடரப்பட வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.