பயமுறுத்தும் பன்றிக்காய்ச்சல்…கைகளை சுத்தம் செய்தால் நோய் தாக்காது!
சென்னை: பன்றிக்காய்ச்சல் பற்றி பயம் வேண்டாம் என்று மருத்துவர்கள் மாறி மாறி கூறிவந்தாலும் அந்நோய்க்கு மரணிப்பவர்களின் எண்ணிக்கையைப் பற்றி கேள்விப்படும் போது மக்களால் அச்சமின்றி இருக்க முடியவில்லை. பன்றிக்காய்ச்சல் பலி எண்ணிக்கை அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்து 50 நாட்களுக்குள் 900 பேரை காவு வாங்கிவிட்டது.
ராஜஸ்தானில் பன்றிக்காய்ச்சலுக்கு நேற்று மட்டும் 13 பேர் உயிரிழந்ததையடுத்து இந்த ஆண்டில் இதுவரை இம்மாநிலத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 225 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் தலைநகர் ஜெய்ப்பூரில் மட்டும் 42 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த மூன்று நாட்களில், தமிழகம் முழுவதும் 42 பேருக்கும், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில், 10 பேருக்கும், பன்றிக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. சென்னையில் கடந்த சில வாரங்களாக, பன்றிக் காய்ச்சல் பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. மூன்று நாட்களுக்கான ரத்த பரிசோதனை ஆய்வக முடிவு, அதை உறுதிபடுத்தியது.
(தீயாய் பரவும் பன்றிக் காய்ச்சல்... பதற வேண்டாம்: முன்னெச்சரிக்கையாக என்ன செய்யலாம்?)
சென்னையை பொறுத்த வரை, தேனாம்பேட்டை, தண்டையார்பேட்டை, பெருங்குடியில் தலா இருவர், அம்பத்தூர், ராயபுரம், கோடம்பாக்கம், அடையாறு ஆகிய பகுதிகளில் தலா ஒருவர் என, 10 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த பகுதிகளை, மாநகராட்சி கண்காணிக்க ஏற்பாடுகளை செய்து வருகிறது.
‘சுத்தம் சோறு போடும்'... ‘கூழானாலும் குளித்துக் குடி'என்பது முன்னோர் வாக்கு... இன்றைக்கு கைகளை சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் பன்றிக்காய்ச்சல் நோய் பாதிப்பில் இருந்து தப்பலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.
பன்றிக்காய்ச்சல்
இந்திய மக்களை அச்சுறுத்தி வரும் பன்றிக்காய்ச்சல் 1920 - 1930-ம் ஆண்டுகளில் பன்றிகளிடம் காணப்பட்டது. ஆரம்பத்தில் பன்றிகளிடம் இருந்து பன்றிகளுக்கு காய்ச்சல் பரவி வந்தது. நாளடைவில் பன்றிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவத் தொடங்கியது. அதன்பின் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவி வருகிறது.
5 நாட்களில் குணமாகலாம்
தற்போது பன்றிகள் மூலமாக மனிதர்களுக்கு பன்றிக்காய்ச்சல் பரவுவதில்லை. 'எச்1என்1 - இன்ஃப்ளுயன்சா வைரஸ்' கிருமிகளால் பன்றிக்காய்ச்சல் பரவுகிறது. பன்றிக்காய்ச்சலுக்கு டாமி புளூ மாத்திரையை உட்கொண்டால் 5 நாட்களுக்குள் காய்ச்சல் முழுவதுமாக குணமாகிவிடும்.
ஃப்ளூ காய்ச்சல்
பன்றிக்காய்ச்சல் வீரியம் குறைந்து சாதாரண ஃப்ளூ காய்ச்சல் என்ற நிலையில் இருக்கிறது. கடந்த 2009-ம் ஆண்டு பன்றிக்காய்ச்சலை கொடிய நோய் என்று அறிவித்த உலக சுகாதார நிறுவனமே, தற்போது பருவ காலங்களில் காணப்படும் சாதாரண ஃப்ளூ காய்ச்சல் என அறிவித்துவிட்டது. பன்றிக்காய்ச்சல் பாதிப்பு குறித்து மக்கள் அச்சம், பயம் மற்றும் பீதி அடைய வேண்டாம் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மருத்துவமனைக்கு செல்லுங்கள்
பன்றிக்காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சைப் பெற வேண்டும். டாக்டர்களின் ஆலோசனைப்படி டாமி புளூ மாத்திரையை உட்கொள்ள வேண்டும். தாமாகவே கடைகளுக்கு சென்று மாத்திரை, மருந்துகளை வாங்கி உட்கொள்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
யாருக்கு என்ன பரிசோதனை
ஸ்வைன் ஃப்ளூ அல்லது பன்றிக்காய்ச்சல் மூன்று விதமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. தங்களுக்கு உள்ள அறிகுறிகளை வைத்து அதற்கேற்ப பரிசோதனை செய்து மருந்துகளை உட்கொண்டால் நோய்களை குணமாக்கலாம் என்பது மருத்துவர்களின் அறிவுரையாகும். இது குறித்து சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஏ டைப்
ஏ டைப் வைரஸ் தொற்றினால் லேசான காய்ச்சல் இருக்கும். சளி, இருமல் , தலைவலி, வயிற்றுப்போக்கு வாந்தி ஆகியவை இருக்கும். சிலருக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி இருக்காது. இவர்களை இரண்டு நாட்கள் மருத்துவர்களின் கண்காணிப்பில் வைத்திருந்து சிகிச்சை அளிக்க வேண்டும்.
இந்த நோய் வந்தவர்களை தனிமை படுத்தி சாதாரண வைரஸ் காய்ச்சலுக்கு உரிய சிகிச்சை அளித்தால் போதும். இவர்களுக்கு டாமிபுளு மாத்திரை கொடுக்கக்கூடாது. ஏன் என்றால் அவ்வாறு அந்த மாத்திரை கொடுத்தால் அது பின்விளைவை ஏற்படுத்தும்.
இவர்களுக்கு ஆய்வக பரிசோதனை தேவை இல்லை. வீட்டில் ஓய்வு எடுத்து கொள்ளும்படியும் மற்ற நபர்களிடம் தொடர்பை குறைத்துக் கொள்ளச் செய்ய வேண்டும்.
பி டைப்
இந்த டைப் நோயாளிகளுக்கு ஏ டைப் நோயாளிகளுக்கு இருந்த அனைத்து அறிகுறிகளுடன் காய்ச்சல் அதிகமாக இருக்கும். தொண்டை வலி அதிகமாக இருக்கும். பி டைப் நோயாளிகள் உடனடியாக மருத்துவர்களை அணுகவேண்டும். உடனடியாக டாமி புளு மாத்திரை உட்கொள்ளவேண்டும்.
பாதிப்பு யாருக்கு
குழந்தைகள், 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், நுரையீரல் பாதிப்பு உள்ளவர்கள், இருதயம் பாதிப்பு உள்ளவர்களை அதிகம் பாதிக்கிறது. பி டைப் நோயாளிகளுக்கும் ஆய்வக பரிசோதனை தேவை இல்லை என்றாலும், அவர்கள் வீட்டிலேயே ஓய்வெடுக்க வேண்டும். நோய் குணமாகும் வரை பொது இடங்களுக்கு செல்லக்கூடாது என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
சி டைப்
சி டைப் நோயாளிகளுக்கு பி டைப் நோயாளிகளுக்கு இருந்த அறிகுறி தவிர வழக்கத்தை விட அதிக மூச்சுத்திணறல் ஏற்படும். ரத்தத்துடன் கலந்த சளிவரும். நகம் நீல நிறமாக மாறும். சாப்பிட மனம் வராது. பசி எடுக்காது. உடனே ஆய்வக பரிசோதனை செய்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும்.
எப்படி பரவுகிறது?
பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் இருமும்போதும், தும்மும் போதும் வெளியே வரும் எச்சில் மற்றும் சளி துளிகள் மூலம் வைரஸ் கிருமிகள் காற்றில் பரவுகிறது. இந்த வைரஸ் கிருமிகள் குளிர்ந்த இடங்களில் இரண்டு நாட்கள் வரை உயிருடன் இருக்கும். மற்ற இடங்களில் பல மணி நேரத்திற்கு வைரஸ் கிருமிகள் உயிருடன் காணப்படும்.
கைகளை கழுவாமல்
இந்தக் கிருமிகள் படிந்துள்ள கதவு, கைப்பிடி, நாற்காலி, மேசை, குளிர்சாதன பெட்டி போன்ற பல்வேறு பொருட்களை நாம் தொடும்போது, நம்முடைய கைகளில் கிருமி ஒட்டிக் கொள்கிறது. அதன்பின் நாம் கைகளை கழுவாமல் கண்கள், மூக்கு மற்றும் வாயை தொடும்போது நமக்கும் கிருமி தொற்று ஏற்படுகிறது.
வருமுன் தடுக்கலாம்
பன்றிக்காய்ச்சல் 80 சதவீதம் கைகளை சுத்தமாக கழுவதாததால் தான் பரவுகிறது. வீட்டில் இருந்து பள்ளி, அலுவலகம் சென்றவுடன் சோப்பு போட்டு கைகள் மற்றும் கால்களை நன்றாக தேய்த்து கழுவ வேண்டும். அதே போல வீடு திரும்பிய உடன் சோப்பு போட்டு கைகள் மற்றும் கால்களை நன்றாக கழுவ வேண்டும். ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை கைகளை சுத்தமாக கழுவினால் மிகவும் நல்லது. கைகளை கழுவால் மூக்கு, வாய் மற்றும் கண்களை தொடக்கூடாது.
உப்பு கலந்த வெந்நீர்
காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள் மற்றும் இருமல், தும்மல் இருப்பவர்களிடம் இருந்து சுமார் 1 மீட்டர் இடைவெளி விட்டு விலகி இருக்க வேண்டும். இவர்களிடம் கைக்குலுக்க வேண்டாம். வெதுவெதுப்பான நீரில் உப்பு கலந்து வாய் கொப்பளிக்க வேண்டும். வெதுவெதுப்பான நீரை குடிக்க வேண்டும்.
பொது இடங்களில்
வீட்டில் உள்ள பொருட்களை தினமும் கிருமி நாசினிகளை கொண்டு சுத்தமாக துடைக்க வேண்டும். பேருந்து, ரயில்களில் பயணிப்பவர்கள் மற்றும் திரையரங்கம், வணிக வளாகங்கள் என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்பவர்கள் முக கவசங்கங்களை (மாஸ்க்) அணிந்து செல்ல வேண்டும்.
சந்தேகமா? இங்கே கேளுங்க
பன்றிக்காய்ச்சல் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையை (டிபிஎச்) 044-24350496, 044-24334811, 9444340496, 9361482899 மற்றும் மருத்துவ உதவி சேவை மையத்தை 104 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்