அத்தனை பேரும் எழுந்து நின்று கைதட்டி இந்த டாக்டர்களைப் பாராட்டுவோம்!
மணப்பாறை: தொண்டைப் பகுதியில் ஹேர்பின் சிக்கியதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிருக்கு போராடிய 6 மாதக் குழந்தைக்கு, அறுவைச் சிகிச்சை செய்யாமலேயே 10 நிமிடத்தில் மூச்சுக்குழலில் சிக்கிய ஹேர்பின்னை அகற்றி மணப்பாறை மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.
கரூர் மாவட்டம், கீழவெளியூர் அருகே உள்ள பிள்ளையார் கோவில்பட்டியை சேர்ந்த விவசாயி பாலசுப்ரமணி. இவரது மனைவி லோகாம்பாள். இவர்களுக்கு ரிஷிநாத் என்ற 6 மாத ஆண் குழந்தை உள்ளது.
நேற்று காலை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த ரிஷி, அருகில் இருந்த ஹேர்பின்னை எடுத்து வாயில் போட்டுள்ளான். வாயில் இருந்த ஹேர்பின் எதிர்பாராத விதமாக மூச்சுக்குழலில் சிக்கியது. இதனால் ரிஷி மூச்சு விட முடியாமல் சிரமத்திற்கு ஆளானான்.
திடீரென குழந்தை மூச்சுத் திணறலுக்கு ஆளாகி அழுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பாலசுப்ரமணியும், அவரது மனைவியும், உடனடியாக ரிஷியை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு குழந்தையைப் பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள், தொண்டைப் பகுதியில் ஏதோ ஒரு பொருள் சிக்கியிருப்பதைக் கண்டுபிடித்தனர். ஆனால், அதனை அகற்றுவது கடினம் எனக் கூறி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு சிபாரிசு செய்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டான் ரிஷி. அப்போது அங்கு பணியில் இருந்த மருத்துவர் ஜான் விஸ்வநாதன், குழந்தையை பரிசோதனை செய்து உடனடியாக எக்ஸ்ரே எடுத்து பார்த்தார். அப்போது குழந்தையின் மூச்சுக்குழல் அருகே சுமார் ஒன்றரை இன்ச் நீளம், ஒரு இன்ச் அகலம் கொண்ட ஒரு ஹேர்பின் சிக்கி இருப்பது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து ரிஷியின் தொண்டைப் பகுதியில் இருந்த ஹேர்பின்னை அகற்றும் நடவடிக்கைகளில் மருத்துவர்கள் குழு இறங்கியது. இதையடுத்து மருத்துவர்கள் மலைதுரை, வில்லியம் ஆண்ட்ரூ உள்ளிட்ட 3 டாக்டர்கள் சேர்ந்து அறுவை சிகிச்சை இல்லாமல் குழந்தையின் மூச்சுக்குழல் பகுதியில் இருந்த ஹேர்பின்னை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
நவீன கருவியின் உதவியுடன் தொண்டையில் சிக்கி இருந்த ஹேர்பின்னை சுமார் 10 நிமிடத்திற்குள் மருத்துவர்கள் அப்புறப்படுத்தினர். பின், ரிஷிநாத்துக்கு உடனடியாக அவசர கால சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது குழந்தையின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
விரைந்து செயல்பட்டு மூச்சுக்குழல் பகுதியில் சிக்கிய ஹேர்பின்னை வெளியே எடுத்து குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய மருத்துவர்களுக்கு, பாலசுப்ரமணியும், அவரது மனைவியும் கண்ணீருடன் நன்றி தெரிவித்தனர். சாதனை படைத்த டாக்டர்களை நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.