காந்தி நேசித்த கைத்தறி நெசவு... கரூரில் நலிவடையும் அவலம்... நெசவுப் புரட்சி வருமா?
கரூர்: மகாத்மா காந்தி நேசித்த கைத்தறி தொழில் நலிவடைந்து வரும் அவல நிலை கரூர் மாவட்டத்தில் தொடர்கிறது. மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து கைத்தறி நெசவுத் தொழிலை புறக்கணித்து வருவதால் கரூரில் நெசவுப்புரட்சி வர வேண்டும் என்று நெசவாளர்கள் மத்தியில் கோரிக்கை நிலவுகிறது.
தமிழகத்திலேயே மைய மாவட்டம் கரூர் மாவட்டம் ஆகும். அப்புகழ் பெற்ற கரூர் மாவட்டம், வணிகம், ஆன்மீகம், பஸ் பாடி கட்டுதல், கொசு வலை உள்ளிட்ட தொழில்களில் ஆகியற்றில் பண்டைய காலம் முதல் இன்றைய காலம் வரை இந்திய அளவில் கரூர் நகரம் புகழ் பெற்றது.
இதை விட கைத்தறி மற்றும் விசைத்தறி தொழிலால் கரூர் மாவட்டம் உலக அளவில் பேசப்பட்டு வந்தது. ஆனால் தற்போது கைத்தறி நெசவுத் தொழில் தேய்ந்து போய் விட்டதால் தொழில் நலிவடைந்து உள்ளது. கரூர் மாவட்டத்தில் கடந்த 1977 ம் ஆண்டு 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைத்தறி நெய்யும் தறிகள் இருந்தது. ஆனால் 2015 ல் வெறும் 6 ஆயிரம் கைத்தறி தறிகள் மட்டுமே உள்ளன. ஏனென்றால் பவர்லூம் (விசைத்தறி), செட்லூம் (ஆட்டோமெட்டிக் துணி நெய்யும் தறி) இவைகள் வந்ததால் கைத்தறி சுத்தமாக நலிவடைந்தது.
இது குறித்து கரூர் மாவட்ட கைத்தறி உற்பத்தியாளர் சங்க தலைவரும், அகில இந்திய நெசவாளர் ஐக்கிய முன்னணியின் துணை தலைவருமான என்.பழனிச்சாமியிடம் கேட்ட போது காந்தி கண்ட கைத்தறி இந்தியா, நாகரீக உலகில் முழுக்க முழுக்க நலிவடைந்துள்ளது. கைத்தறி குறைந்ததற்கு காரணம், பவர் லூம், செட்லூம் தான். ஏனென்றால் பவர்லூம் ஆனது நூல்களை கொண்டு ஒரு நாள் ஒன்றுக்கு சுமார் 40 மீட்டரிலிருந்து 50 மீட்டர் துணியை நெய்கிறது. இதே செட் லூம் ஆனது ஒரு நாள் ஒன்றுக்கு சுமார் 250 மீட்டர் முதல் 300 மீட்டர் வரை நெய்கிறது.
இப்படிப்பட்ட தொழில் கைத்தறியில் குறைந்த மீட்டரே அதாவது மனிதனின் நெய்யும் திறனுக்கு ஏற்றவாறு துணி கிடைக்கிறது. அதே சமயம் கைத்தறி நெசவுத்தொழில் நெய்தால் நாள் ஒன்றுக்கு கூலி ரூ 70 லிருந்து 80 வரை தான் கிடைக்கிறது. அதுவும் நிரந்தரமில்லை. கரூர் மாவட்டத்தில் கைத்தறிக்கான கூட்டுறவு சங்கங்கள் மொத்தம் 56 உள்ளன. ஆனால் 56 சொசைட்டிகளுக்கு சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தறிகள் இருக்க வேண்டும் ஆனால் இங்கு இல்லை. சொசைட்டிகளுக்கு ஏற்றவாறு கைத்தறி தறிகள் இல்லை.
நெசவாளர் பலர் இருந்தும் அவர்களுக்கு கூலி இல்லை. கூலி உயர்வு அதிகப்படுத்த வேண்டும். கைத்தறியின் மேல் மக்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். இதற்கு நெசவு புரட்சி ஏற்படுவது தவிர வேறு வழியே இல்லை. ஏனென்றால் இந்தியாவில் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் உணவு உற்பத்தி முடங்கியதையடுத்து விவசாயிகள் தொடர்ந்து அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டனர்.
இந்நிலையில் 1968 ஆம் ஆண்டு உணவு உற்பத்தியை பெருக்கவும், விவசாயத்தை பாதுகாக்கவும், இந்தியாவில் பசுமைப்புரட்சி வந்தது. பிறகு விவசாயம் பாதுகாக்கப்பட்டதோடு விளை நிலங்களில் வேளாண்மை அதிகரித்தது. விவசாயத்தில் உழவுக்கு பிறகு கைத்தறி தொழில் ஒரு பிரதான தொழில் ஆகும். எப்படி என்றால் விளைச்சல் பருத்தி பயிரிட்டு, அப்பருத்தி மூலம் நூல் தயாரித்து, நெசவாளர் மூலம் துணி நெய்யப்பட்டு மனிதனுக்கு உடையாக கொடுக்கிறோம். அப்படி பட்ட நெசவு தொழிலை, குறிப்பாக கைத்தறி தொழில் காக்க மத்திய மாநில அரசுகள் மறந்து விட்டன. அப்படிப்பட்ட கைத்தறி தொழிலை காக்கவும், நெசவாளர்களை காப்பாற்ற ஏன் நெசவுப்புரட்சி ஏற்படக்கூடாது. நெசவுப்புரட்சி ஏற்பட வேண்டும், கைத்தறி தொழில் காக்கப்பட வேண்டும். நெசவாளர் கூலி வரைமுறைப்படுத்த வேண்டும்.
கடந்த 1995 முதல் 2000 வரை கைத்தறி நெசவாளர்களுக்கு நல்ல கூலி கிடைத்தது. அதாவது ரூ 150 லிருந்து ரூ 200 வரை கிடைத்தது. ஆனால் அது தற்போது பாதியளவாக குறைந்துள்ளது. கைத்தறி நெசவாளர்களுக்கு நிரந்தரமான வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும். அதற்கு கோ ஆப்டெக்ஸ் ஏ.டி யில் 2 பேர், கைத்தறி தொழிற்சங்கத்தில் 2 பேர் என குழுவாக நியமித்து கரூர் மாவட்டத்தில் எத்தனை தறி உண்மையாக உள்ளது என்பதை கண்டறிவதோடு அவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கொடுக்க வேண்டும். மேலும் மத்திய சர்க்கார், மாநில சர்க்கார் கொடுக்கும் மானியத்தின் பணம் நெசவாளர்களுக்கு துல்லியமாக சென்று சேருவதில்லை. ஓரு நெசவாளருக்கு ரூ 300 லிருந்து ரூ 350 ஆக இருக்க வேண்டும். இதை இரண்டு (மத்திய, மாநில) சர்க்கார்கள் சரியாக கணக்கிட வேண்டும். அரசு கொடுக்கும் பணம் நெசவாளர்களை முறையாக சென்றடைவதில்லை. இன்று கைத்தறி தொழிலை காக்க வேண்டுமானால் அரசுகளின் கவனம் கைத்தறி மீது செலுத்தப்பட வேண்டும். கைத்தறி நெசவை காக்க நெசவுப்புரட்சி வெடிப்பதில் சந்தேகமில்லை என்றார் அவர்