மாட்டுக்கறி சாப்பிடுவோரை நடுரோட்டில் தூக்கிலிடணும்! - பெண் சாமியாரின் 'கொலவெறி'ப் பேச்சு
பனாஜி: 'மாட்டிறைச்சி சாப்பிடுவோரை நடுரோடில் பொது மக்கள் முன்னிலையில் துாக்கிலிட வேண்டும்,'' என, பெண் சாமியார் சாத்வி சரஸ்வதி கூறியுள்ளார்.
இது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பனாஜியில், அகில இந்திய இந்து மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, 130 இந்து அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
மாநாட்டை துவக்கி வைத்து, மத்திய பிரதேசத்தில் உள்ள சனாதன தர்ம பிரசார் சேவா சமிதியின் தலைவர், சாத்வி சரஸ்வதி பேசுகையில், "இந்து மக்களை முதலில் நாம் இந்துக்களாக மாற்ற வேண்டும். ஏனெனில் அவர்கள் மதச்சார்பின்மை என்ற பெயரில் மத உணர்வு இல்லாமல் இருக்கின்றனர்.
பசு நம்முடைய தாய். நம்முடைய தாயையே நாம் உணவாக உட்கொள்வதா?
பெருமைக்காக மாட்டுக்கறி உண்பவர்களை நடுரோட்டில் மக்கள் மத்தியில் தூக்கில் போட வேண்டும். அப்போது தான் மாடுகளைப் பாதுகாப்பதில் மற்றவர்கள் பொறுப்பாக இருப்பார்கள்.
இந்துக்களுக்கும், பாரத நாட்டுக்கும் இப்போது, அனைத்து திசைகளிலும் ஆபத்து சூழ்ந்துள்ளது. அமர்நாத் யாத்திரையை தடுத்து நிறுத்தவும், ஒரு கூட்டம் அலைகிறது.
பாரத மாதாவையும், கோமாதாவையும் காப்பாற்ற, வீடுகளில் இந்துக்கள், ஆயுதங்கள் வைத்திருக்க வேண்டும்.
கண்டனம்
சாத்வி சரஸ்வதியின் கொலவெறிப் பேச்சுக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.