வாகனங்கள் வைத்திருப்போருக்கு போக்குவரத்து துறை மகிழ்ச்சியான அறிவிப்பு.. 50 ஆயிரம் மிச்சமாகும்!
சென்னை: மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளதை அடுத்து இனி பழைய வாகனங்களுக்கு 2ஆண்டுக்கு ஒரு முறை எப்சி வாங்கினால் போதும் என தமிழக அரசின் போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.
1989ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தில் மத்திய அரசு கடந்த ஆண்டு திருத்தம் கொண்டுவந்தது.
அதன்படி 8 ஆண்டுகளுக்குள் இருக்கும் வாகனங்கள் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை எப்சி வாங்க வேண்டும். அதற்கு மேல் உள்ள வாகனங்கள் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை எப்சி வாங்க வேண்டும்.
ஆவணங்கள்
டிரைவிங் லைசென்ஸ், இன்சூரன்ஸ், ஆர்சி, எப்சி, பர்மிட் போன்றவற்றை டிஜிட்டலாக கொண்டு செல்லலாம். ஆபத்தான பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் வெள்ளை நிறத்தில் இருக்க வேண்டும். டிராக்கிங் டிவைஸ் கட்டாயம் பொருத்தி இருக்க வேண்டும். எந்த பொருளையும் வெளியில் தெரியும் படி கொண்டு செல்லக்கூடாது.
இரண்டு ஓட்டுநர்கள்
நேஷனல் பர்மிட் வாகனங்கள் அடர்ந்த பிரவுன் நிறம் பயன்படுத்த தேவையில்லை. இரண்டு ஓட்டுநர்கள் இருக்க வேண்டிய கட்டாயமும் இல்லை.. நேஷனல் பர்மிட் வாகனங்களின் பின்புறத்திலும் முன்புறத்திலும் என்பி என்று பெரிய எழுத்துக்களால் பொறிக்கப்பட்டு இருக்க வேண்டும். போன்ற சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.
புதிய விதிகள்
தமிழக அரசும் போக்குவரத்து சட்டத்தில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. மேலே உள்ள விதிகளை அமல்படுத்துவது தொடர்பாக போக்குவரத்து துறை முதன்மை செயலாளரும், போக்குவரத்து ஆணையருமான தென்காசி ஜவஹர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அவர் தனது உத்தரவில், மத்திய அரசின் புதிய விதிகளின் படி விஹான் இணையதளத்தில் உரிய மாற்றங்களை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
50ஆயிரம் மிச்சம்
லாரிகளுக்கு ஒருமுறை எப்சி வாங்க வேண்டும் என்றால் 50000 ரூபாய் செலவாகும். தற்போது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை எப்சி வாங்கினால் போதும் என விதி மாற்றப்பட்டுள்ளதால் லாரி உரிமையாளர்களுக்கு ஒரு லாரிக்கு ஆண்டுக்கு ரூ.50000 இனி மிச்சமாகும். தமிழக அரசின் இந்த அறிவிப்பு லாரி உரிமையாளர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.