புகாரில் சிக்கிய சந்தீப் சக்சேனா… தமிழகத்தின் புதிய தலைமைத் தேர்தல் அதிகாரி யார்?
சென்னை: தமிழகத்தின் புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக ஹர்சகாய் மீனா ஐ.ஏ.எஸ்., நியமிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய தலைமைத் தேர்தல் அதிகாரி நியமனம் தொடர்பாக மூன்று பேர் அடங்கிய பட்டியலில் ஒருவரைத் தேர்வு செய்து ஓரிரு நாளில் தேர்தல் ஆணையத்துக்கு தமிழக அரசு அனுப்பி வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாக்காளர் பட்டியலில் திமுகவினர் திட்டமிட்டு நீக்கம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இறந்து போனதாக குறிப்பிடப்பட்டிருந்த பலரை கடலூரில் நடைபெற்ற திமுக மாநாட்டில் உயிரோடு கொண்டு வந்து நிறுத்தினார் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின். இதனையடுத்து தமிழக தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா மீது எதிர்கட்சியினர் பல்வேறு புகார்களை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்துதமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியாக உள்ள சந்தீப் சக்சேனா, தேர்தல் ஆணையத்தால் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதிதாக அதிகாரி ஒருவர் நியமிக்கப்படும் வரை, சந்தீப் சக்சேன தேர்தல் அதிகாரியாக பணியைத் தொடர உள்ளார். இந்த நிலையில், புதிய தலைமைத் தேர்தல் அதிகாரி யார் என்ற கேள்வி பல்வேறு தரப்பினரிடையே எழுந்துள்ளது.
இதனிடையே ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த, தமிழகப் பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரியான ஹர்சகாய் மீனா, இப்போது சுற்றுலாத் துறை செயலாளராக உள்ளார். அவரது பெயர் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பொறுப்புக்கு கூறப்படுகிறது. மேலும், தமிழகத்தைச் சேர்ந்த முதன்மைச் செயலாளர்கள் சிலரது பெயரும் பட்டியலில் இருப்பதாகத் தெரிகிறது. இரு தினங்களில் தலைமை தேர்தல் அதிகாரி பெயர் வெளியாகும் என்று தலைமைச் செயலக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.