மதுரவாயல்-துறைமுகம் பறக்கும் சாலை திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்: முதல்வர் பேட்டி
மத்திய, மாநில அதிகாரிகள் பார்வையிட்டு, நேர்பாட்டை சரி செய்து விரைவில் மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் செயல்படுத்தப்படும் என்றார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
டெல்லி: மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் மத்திய நெடுஞ்சாலைத்துறை மற்றும் கப்பல் போக்குவரத்துறை அமைச்சர் நிதின் கத்கரியை இன்று சந்தித்து பேசிய பிறகு பழனிச்சாமி இவ்வாறு கூறினார்.
மதுரவாயல் முதல் எண்ணூர் துறைமுகம் வரையிலான பறக்கும் சாலை திட்டம் கூவம் ஆற்றின் போக்கை கெடுப்பதாக கூறி, ஜெயலலிதா முதல்வராக இருந்தவரை அத்திட்டத்திற்கு அனுமதி மறுத்து வந்தார்.
இந்நிலையில், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அரசு மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க உடன்பட்டார். இருப்பினும் அதிகாரப்பூர்வமாக திட்டம் தொடங்கவில்லை.
இந்நிலையில் இன்று டெல்லியில் கட்கரியுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது:
200 கி.மீ சாலைகளை தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற கோரிக்கைவிடுத்தோம். கட்கரி ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளோம். பரிசீலித்து தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்தை, மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து விரைவாக செயல்படுத்த பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். அந்த பால திட்டத்தில், சில நேர்பாடு மாற்றம் செய்ய வேண்டியுள்ளது. மத்திய, மாநில அதிகாரிகள் பார்வையிட்டு, நேர்பாட்டை சரி செய்து விரைவில் அந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்றார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், மதுரை வெளிவட்ட சாலை திட்டத்துக்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது என்றார்.