தவே மறைவால் அமைச்சர் ஹர்ஷவர்தனிடம் சுற்றுச்சூழல் துறை ஒப்படைப்பு
சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த அனில் மாதவ் தவே காலமானதால் அவரது துறை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தனிடம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டது.
டெல்லி: சுற்றுச் சூழல் துறை அமைச்சராக இருந்த அனில் மாதவ் தவே உடல் நலக் குறைவால் இன்று காலமானார். இதனால் அவர் வசம் இருந்த சுற்றுச் சூழல் துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு கூடுதலாக ஒப்படைக்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக செயல்பட்டு வந்தவர் தவே. 60 வயதான இவருக்கு உடல் நலக் குறைவால் இன்று காலை திடீரென காலமானார். மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த இவர் பாஜகவின் முக்கிய தலைவராக திகழ்ந்து வந்தார்.
மத்திய பிரதேச மாநிலத்தின் ராஜ்யசபா எம்பியாக இருந்த வந்த அனில் தவேவிற்கு 2016-ம் ஆண்டு தனிப் பொறுப்பாக சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் பிரதமர் மோடியால் வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் வசம் இருந்த மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சராக உள்ள ஹர்ஷவர்தனனுக்கு சுற்றுச்சூழல் துறை கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கர் கோவா முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அவரது துறை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியிடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.