திடீர் என்று காணாமல் போன சோபியாவின் டிவிட்டர் கணக்கு.. அரசு முடக்கியதா?
பாசிச பாஜக ஒழிக என்று கோஷமிட்ட மாணவி சோபியாவின் டிவிட்டர் கணக்கு காணாமல் போய் உள்ளது.
சென்னை: பாசிச பாஜக ஒழிக என்று கோஷமிட்ட மாணவி சோபியாவின் டிவிட்டர் கணக்கு காணாமல் போய் உள்ளது. இதை அரசு முடக்கிவிட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
நேற்று தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசைக்கு எதிராக மாணவி சோபியா 'பாசிச பாஜக ஆட்சி ஒழிக'' என்று கோஷமிட்டனர். அவரின் இந்த கோஷம் தற்போது வைரல் ஆகியுள்ளது.
அவர் இட்ட ''பாசிச பாஜக ஆட்சி ஒழிக கோஷம்'' இணையத்தில் டிரெண்ட் ஆகியுள்ளது. சோபியா என்ற பெயரும் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கைதும் விடுவிப்பும்
தமிழிசை அளித்த புகாரின்பேரில் போலீசார் சோபியாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் தற்போது மாணவி சோபியாவுக்கு ஜாமின் வழங்கியது தூத்துக்குடி நீதிமன்றம். அவருக்கு நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
டிவிட்டர் பிரபலம்
சோபியா இதற்கு முன்பில் இருந்தே மத்திய பாஜக அரசுக்கும், மாநில அதிமுக அரசுக்கு எதிராக தொடர்ச்சியாக குரல் கொடுத்து வந்துள்ளார். அதேபோல் தமிழிசைக்கு எதிராக கோஷம் இடும் முன் டிவிட்டரில் பதிவிட்டுவிட்டே கோஷம் இட்டுள்ளார். இதுவும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
கணக்கு இல்லை
ஆனால் இன்று காலை தமிழிசை குறித்து அவர் செய்த டிவிட் நீக்கப்பட்டது. அவர் ஜெயிலில் இருக்கும் போதே இது நீக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது அவர் கணக்கே காணாமல் போய் உள்ளது. மொத்தமாக அவர் கணக்கே டிவிட்டரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
யார் காரணம்
இதற்கு காரணம் என்னவென்று இன்னும் தெரியவில்லை. அந்த கணக்கு அரசால் முடக்கப்பட்டு இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல் சோபியாவின் குடும்ப உறுப்பினர்கள் யாராவது இப்படி செய்தனரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால் இதுகுறித்த முழுமையான விவரம் வெளியாகவில்லை.