புதுக்கோட்டை: வறுமையில் வாடும் எம்பிபிஎஸ் மாணவிக்கு ரூ.75,000 நிதியுதவி - முதல்வர் ஜெயலலிதா உத்தரவு
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏழ்மை காரணமாக எம்பிபிஎஸ் படிக்க முடியாமல் தவித்து வந்த மாணவி மேகலாவிக்கு, ரூ.75000 நிதியுதவி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள அணவயல் பூசாரி தெரு பகுதியைச் சேர்ந்தவர் வல்லத்தரசு (55) வாசுகி தம்பதி. இவர்களுக்கு மேகலா (18) என்ற மகனும் மோகனதாஸ் (13) என்ற மகளும் உள்ளனர். வல்லத்தரசு ஆடுகள் மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். அதில் வரும் வருமானத்தை வைத்தே வல்லத்தரசு குடும்பம் நடத்தி வருகிறார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அணவயல் எல்.என்.புரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மேகலா 10-ம் வகுப்பு படித்து வந்தார். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் குறிப்பிடும்படியாக 473 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றார்.
இந்நிலையில், நடந்து முடிந்த 12-ம் வகுப்பு பொது தேர்வில் மேகலா 1129 மதிப்பெண்களுடன் எடுத்து தேர்ச்சி பெற்றார். மேலும் எம்பிபிஎஸ் படிப்பிற்காக கட் ஆப் 196.25 வாங்கி இருந்ததால், கவுன்சலிங் மூலமாக திருநெல்வேலி மருத்துவக்கல்லூரில் எம்.பி.பி.எஸ். படிக்க இலவசமாக இடம் கிடைத்திருக்கிறது. மேகலாவிற்கு எம்பிபிஎஸ் சீட் கிடைத்தது குறித்து அவரது குடும்பம் மகிழ்சியடைந்த போதிலும், படிப்புச் செலவு தான் சற்று தடங்கலாக இருந்தது.
இந்நிலையில், மேகலாவை எப்படியாவது எம்பிபிஎஸ் படிக்க வைத்துவிட வேண்டும் என கருதி திருநெல்வேலி மருத்துவக்கல்லூரில் சேர்த்துவிட்டனர். விடுதி கட்டணம் மற்றும் புத்தகம் வாங்க கட்டணம் என்று பல ஆயிரங்கள் தேவை என்பதால், சிலரிடம் தேவையான பணம் கடன் வாங்கி மேகலாவை கல்லூரியில் சேர்த்துள்ளனர். படிப்பிற்காக மேலும் பணம் செலுத்த வேண்டும் என்பதால் என்ன செய்வதென்று தெரியாமல் ஏழ்மையில் சிக்கித் தவித்து வந்தது மேகலாவின் குடும்பம். மேலும் தமிழக அரசு உதவி உதவ வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதையறிந்த முதல்வர் ஜெயலலிதா, வறுமையில் வாடும் மேகலாவின் குடும்பத்தின் நிலையை கருத்தில் கொண்டு ரூ.75,000 நிதியுதவி அளிக்க உத்தரவிட்டுள்ளார்.