தஷ்வந்த்துக்கு தூக்கு.. செல்போனில் ஹாசினி போட்டோவுக்கு முத்தம் கொடுத்து கதறியழுத தந்தை
செல்போனில் மகள் போட்டோவுக்கு முத்தம் கொடுத்து கதறியழுதார் ஹாசினியின் தந்தை.
Recommended Video
செங்கல்பட்டு: ஹாசினி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து செல்போனில் மகள் போட்டோவுக்கு முத்தம் கொடுத்து கதறியழுதார் அவரது தந்தை பாபு.
போரூர் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பாபு- ஸ்ரீதேவி தம்பதியின் மகள் ஹாசினி (7). கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 6-ஆம் தேதி வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த ஹாசினியை அதே குடியிருப்பில் வசித்துவரும் மென்பொருள் பொறியாளர் தஷ்விந்த் பாலியல் பலாத்காரம் செய்ததுடன் பெட்ரோல் ஊற்றி படுகொலை செய்துள்ளார்.
தமிழகத்தையே உலுக்கிய இந்த வழக்கின் விசாரணை செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்று சிறுமியின் தந்தை தெரிவித்தார்.
அதுபோல் சிறுமி தரப்பு வழக்கறிஞர் கண்ணதாசனும், தூக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்று தெரிவித்தார். இருப்பினும் தஷ்வந்த் 25 வயதுக்குட்பட்டவர் என்பதால் அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை கிடைக்கும் என்று கூறியிருந்தார்.
மதியம் 3 மணிக்கு தஷ்வந்த் குற்றவாளி என்று நீதிபதி வேல்முருகன் அறிவிக்கப்பட்ட நிலையில் 4 மணிக்கு அவருக்கு தூக்கு தண்டனை விதித்தார். இதை கேட்டதும் செல்போனில் இருந்த தனது மகளின் போட்டோவை பார்த்து கதறி அழுதார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில் தனது மகள் சாவுக்கு நியாயம் கிடைத்துவிட்டது. இந்த சட்டபோராட்டத்தால் எனது மகள் திரும்ப கிடைக்க போவதில்லை. ஆனால் தஷ்வந்தால் மற்ற குழந்தைகள் யாரும் பாதிக்கக் கூடாது என்பதற்காக போராடினேன் என்றார் அவர்.