தினகரன் கேட்ட 3 சின்னமும் போச்சு... கடைசியா கிடைச்சது குக்கர் சின்னம் தான்!
டிடிவி. தினகரன் ஆர்கே நகரில் போட்டியிட கோரியிருந்த 3 சின்னங்களும் வேறு நபர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் அவருக்கு சின்னம் ஒதுக்கும் பணி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சென்னை : டிடிவி. தினகரன் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பு மனுவில் கோரி இருந்த 3 சின்னங்களும் வேறு வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் அவருக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் வேட்பு மனு தாக்கல், பரிசீலனை, சின்னம் ஒதுக்கீடு என்று பரபரப்பான காட்சிகள் அரங்கேறி வருகின்றன. அதிமுக பொதுச் செயலாளர் கையெழுத்து மதுசூதனனின் வேட்பு மனுவில் இல்லை என்று காரணம் காட்டி அவருக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கூடாது என்று தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டது தினகரன் தரப்பு. எப்படியாவது இரட்டை இலை சின்னத்திற்கு மடை போட்டுவிடப் பார்த்தார்கள், ஆனால் விதிமுறைகளை ஆராய்ந்து மதுசூதனனுக்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் அதிகாரி ஒதுக்கி உத்தரவிட்டார்.
இதனையடுத்து தினகரனுக்கு சின்னம் ஒதுக்கும் வேலையில் ஜரூராக இறங்கினர் அதிகாரிகள். ஆனால் சோதனையைப் பாருங்கள், அவர் கடந்த முறை போட்டியிட்ட தொப்பி சின்னம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு விட்டது. சரி தலையில் இருந்த தொப்பி தான் கைவிட்டுவிட்டது கையில் இருக்கும் விசில், கிரிக்கெட் பேட் இரண்டில் ஏதாவது ஒன்று கைகொடுக்கும் என்று காத்திருந்தது தினகரன் தரப்பு.
ஆனால் சோதனையைப் பாருங்க விசில், கிரிக்கெட் பேட் சின்னத்தையும் சுயேச்சை வேட்பாளர்கள் கோர குலுக்கல் முறை நடைபெற்றதில் அந்த அந்த சின்னங்களும் கைநழுவி போய்விட்டது. இதனால் தேர்தல் ஆணையம் அளித்துள்ள வேறு சின்னங்களில் ஏதாவது ஒன்றை தினகரன் தரப்பு கோர வேண்டிய நிலை ஏற்பட்டது. இறுதியாக சுயேச்சையாக போட்டியிடும் டிடிவி. தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. தினகரனின்
குக்கரில் சாதம் வேகுமா இல்லையா என்பதை தேர்தல் முடிவுகள் தான் சொல்லப்போகின்றன.