சோடா பாட்டில் வீசுவோம்... கல்லெறிவோம்... தமிழகத்தை வன்முறைக் களமாக்க முயற்சியா?
தமிழகத்தை வன்முறைக் மடாதிபதிகள் முயல்கிறார்களா என்ற சந்தேகம் வலுத்துள்ளது.
Recommended Video
சென்னை: ஆண்டாள் விவகாரத்தை முன்வைத்து சோடா பாட்டில் வீசுவோம்; கல்லெறிவோம் என ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தை வன்முறைக் களமாக்க முயற்சிகள் தொடங்கியுள்ளனவா என்ற அச்சமும் எழுந்துள்ளது.
ஆண்டாள் தொடர்பாக ஆய்வாளர் கருத்தை கவிஞர் வைரமுத்து மேற்கோள் காட்டியதையடுத்து அவர் அவதூறாக பேசிவிட்டார்; இழிவுபடுத்திவிட்டார் என ஒரு சமூகத்தினர் கொந்தளித்தனர். இதையடுத்து வைரமுத்து வருத்தம் தெரிவித்தார்.
ஆனாலும் வைரமுத்து குடும்பத்தை மிக இழிவாக விமர்சித்தனர். இதனால் சொல்லாத சொல்லுக்கு பழியேற்கிறேனே என உருக்கமாக வைரமுத்து மீண்டும் வீடியோ மூலம் விளக்கம் அளித்திருந்தார்.
ஜீயரின் வன்முறை பேச்சு
இருப்பினும் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் சந்நிதியின் மண்டியிட்டு வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. இக்கோரிக்கையை முன்வைத்து நடைபெற்ற போராட்டத்தில் பேசிய ஜீயர் சடகோப ராமானுஜம், எங்களுக்கும் கல்லெறியவும் தெரியும்; சோடா பாட்டில்கள் வீசவும் தெரியவும் என வன்முறையை தூண்டியிருக்கிறார்.
நாக்கை அறுத்தால் பரிசு
ஆண்டாள் விவகாரத்தை முன்வைத்து ஏற்கனவே வைரமுத்துவை கொலை செய்யலாமா? நாக்கை அறுத்து வந்தால் ரூ10 லட்சம் பரிசு தருவேன் என பாஜக துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியிருந்தார். பாஜக தேசிய செயலர் எச். ராஜாவும் வன்முறையைத் தூண்டும் விதமாக தொடர்ந்து பேசி வருகிறார்.
மக்களை பிளவுபடுத்தும் யுக்தி
தற்போது மடாதிபதிகளும் வன்முறை எனும் ஆயுதத்தை கையில் எடுக்கின்றனர். தமிழகத்தைப் பொறுத்தவரை இந்துத்துவா கொள்கை வேர்பிடிக்க முடியாத படி அமைதி களமாக இருக்கிறது. வடமாநிலங்களில் மக்களை பிளவுபடுத்தி வன்முறைகளைத் தூண்டி அரசியல் ஆதாயம் பெற்ற பாணியை பாஜக இங்கேயும் பயன்படுத்த முயற்சிக்கிறது.
பெண் சாமியார்களின் அசிங்கப் பேச்சு
இதேபோல சமீபத்தில் இன்னொரு சாமியாரின் பெண் சீடர்கள் சிலர் அசிங்கமாக பேசி வீடியோ வெளியிட்டனர். அதே மடத்தைச் சேர்ந்த இன்னொரு ஆண் சாமியார்.. அசிங்கமான கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தி பேசியதையும் நாடு பார்த்தது.
வெறுப்பரசியலின் உச்சம்
இத்தனை வன்முறை பேச்சுகளையும் தமிழக அரசும் கை கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. வெறுப்பரசியலின் உச்சத்தைத் தொட்டு வன்முறையை நிகழ்த்தி அதன் மூலம் சிலர் குளிர் காய நினைக்கிறார்களா என்ற அச்சம் மக்கள் மனதில் எழுந்துள்ளது. அதைப் போக்க வேண்டியது அரசின் கடமையாகும்.