ரூ.10 கோடி ஹவாலா பணபரிமாற்றம் - டிடிவி தினகரனை கைது செய்ய அமலாக்கத்துறை முடிவு
இரட்டை இலை சின்னம் பெற சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்தாக டிடிவி தினகரன் மீது வழக்குப் பதிவு செய்துள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
சென்னை: இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் தர ஹவாலா புரோக்கர்கள் மூலம் பண பரிமாற்றம் செய்ததாக டிடிவி தினகரன் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் தினகரனை கைது செய்து காவலில் எடுத்து விசாரிக்கவும், அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எம்ஜிஆர் உருவாக்கி ஜெயலலிதா கட்டிக்காத்த இரட்டை இலை சின்னத்தை பிளவுபட்ட அதிமுக நிர்வாகிகளால் கட்டிக்காக்க முடியவில்லை. அதிமுக இரண்டாக உடைந்த பிறகு, இரட்டை இலை சின்னமும், கட்சியும் முடக்கப்பட்டது. கட்சியையும் சின்னத்தையும் மீட்க ஓபிஎஸ், சசிகலா அணியினர் முயற்சி செய்து வருகின்றனர்.
அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த டிடிவி தினகரன் பெங்களூரைச் சேர்ந்த புரோக்கர் சுகேஷ் சந்திரசேகர் மூலம் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் தர ரூ.50 கோடி பேரம் பேசியதாக புகார் எழுந்தது.
டிடிவி தினகரன் கைது
கடந்த 17ஆம் தேதியன்று டெல்லி ஹோட்டலில் தங்கியிருந்த சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ரூ.1.30 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டது. சுகேஷ் சந்திரசேகர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜூனா ஆகியோரையும் கைது செய்தனர்.
திஹார் சிறை
தினகரன், மல்லிகார்ஜூனா ஆகியோரை போலீசார் 5 நாள் காவலில் எடுத்து சென்னைக்கு அழைத்து வந்தனர். தினகரனின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அவரது மனைவி அனுராதாவிடமும் விசாரணை நடந்தது. 3 நாட்கள் விசாரணை நடத்தப்பட்ட பின்னர் டெல்லிக்கு அழைத்து சென்றனர். போலீஸ் காவல் முடிந்ததும் 15 நாட்கள் நீதிமன்றக்காவலில் திஹார் சிறையில் இருவரும் அடைக்கப்பட்டனர்.
ஹவாலா ஏஜெண்ட் கைது
சென்னையில் தினகரனிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் ஹவாலா ஏஜென்ட் நரேஷ் என்பவரை டெல்லி விமானநிலையத்தில் போலீசார் கைது செய்தனர். அவரது வீட்டில் இருந்து ரூ.50 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது. மணல் குவாரி அதிபர்களிடம் இருந்து ரூ.50 கோடியை பெற்று, பல ஹவாலா ஏஜென்ட்கள் மூலம் நரேஷிடம் ரூ.10 கோடி கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ரூ.1.30 கோடியைத்தான் நரேஷ், சுகேஷ் சந்திரசேகரிடம் கொடுத்திருந்தார் என்றும் தெரியவந்தது.
ஹவாலா ஏஜெண்ட்
நரேஷிடம் கொடுக்கப்பட்ட ரூ.10 கோடி, யாரிடம் எல்லாம் கொடுக்கப்பட்டது. தினகரனிடம் இருந்து அனுப்பப்பட்ட மீதம் உள்ள ரூ.40 கோடி யாரிடம் உள்ளது என்பது குறித்து டெல்லி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் பண பரிமாற்றம் முழுவதும் ஹவாலா மூலமே நடந்துள்ளது. இது குறித்து அமலாக்கத்துறைக்கு டெல்லி போலீசார் அறிக்கை கொடுத்தனர்.
அமலாக்கத்துறை வழக்கு
அந்த அறிக்கையைத் தொடர்ந்து டிடிவி தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜூனா, புரோக்கர் சுகேஷ் சந்திரசேகர் ஆகியோர் மீது பண மோசடி சட்டப்பிரிவின் கீழ் அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விரைவில் நீதிமன்ற அனுமதியைப் பெற்று, திஹார் சிறையில் வைத்து 3 பேரையும் கைது செய்வதற்கான உத்தரவின் நகலை அவர்களிடம் வழங்க அமலாக்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். மூவரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்தவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
பாயும் வழக்குகள்
தினகரன் மீது மேலும் 2 பெரா வழக்குகள் நிலுவையில் உள்ளன. தற்போது 10 கோடி ரூபாய் விவகாரத்தில் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
லஞ்சம் தர முயன்ற வழக்கில் டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைது செய்துள்ள நிலையில் அமலாக்கத்துறையும் கைது செய்து விசாரணை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.