முத்துக்குமாரசாமி தற்கொலை: அக்ரி.கிருஷ்ணமூர்த்தி ஜாமீன் மனு ஜூன் 1க்கு ஒத்திவைப்பு
நெல்லை: முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் மூன்றாவது முறையாக ஜாமீன் கோரி தாக்கல் செய்த முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் ஜாமீன் மனு ஜூன் 1ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நெல்லை வேளாண் பொறியாளர் முத்துக்குமராசாமி, கடந்த பிப்ரவரி மாதம் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வேளாண்மைத்துறை தலைமை பொறியாளர் செந்தில் ஆகியோர் கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். இருவரும் தற்போது பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இருவரும் ஜாமீன் கேட்டு நெல்லை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, இருவரும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் ஏப்ரல் 30ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில், இருவரும் ஜாமீன் கேட்டு 2வது முறையாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு கடந்த வாரம் விடுமுறை கால நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில், 3வது முறையாக அக்ரி கிருஷ்ண மூர்த்தி நேற்று ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் சிபிசிஐடி போலீஸாரின் விசாரணை முடியும் தருவாயில் உள்ளது. ரயில்வே போலீஸாரின் விசாரணையும் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ஜாமீன் கிடைக்கும்பட்சத்தில், நான் தலைமறைவாக மாட்டேன். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவேன். எனவே, ஜாமீன் வழங்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி, அடுத்தகட்ட விசாரணையை ஜூன் 1ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.