காதல் விவகாரம்: ஐ.பி.எஸ் அதிகாரி வருண்குமார் நாளை ஹைகோர்ட்டில் ஆஜர்
சென்னை: திருமணம் செய்வதாக கூறி காதலித்து ஏமாற்றியதாகவும், வரதட்சணையாக பெரும் தொகை கேட்பதாகவும் தொடரப்பட்ட வழக்கில் ஐ.பி.எஸ் அதிகாரி வருண்குமார் நாளை உயர்நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த பிரிய தர்சினியும், திருச்சியை சேர்ந்த வருண்குமாரும், அண்ணா நகரில் உள்ள ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அகாடமியில் ஒன்றாக படித்தனர். அப்போது அவர்களுக்கிடையே காதல் ஏற்பட்டது.
அப்போது வருண்குமார், பிரியதர்சினியிடம் ‘‘எனக்காக நீ ஐ.ஏ.எஸ். தேர்வில் கலந்து கொள்ள வேண்டாம். நான் தேர்வில் வெற்றி பெறுவதற்கு உதவி செய்'' என்று கேட்டுள்ளார். இதனால் காதலுக்காக தனது ஐ.ஏ.எஸ். படிப்பை விட்டுவிட்டு வருண்குமார் ஐ.பி.எஸ். அதிகாரியாவதற்கு பல உதவிகளை அவர் செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 2010-ம் ஆண்டு நடைபெற்ற மத்திய பணியாளர் தேர்வாணைய தேர்வில் வெற்றி பெற்று வருண்குமார் ஐ.பி.எஸ். அதிகாரியானார். இதனால் அவரது நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. வரதட்சணையாக பெரிய தொகையை தரவேண்டும் என்று அவர் வற்புறுத்தியதாக தெரிகிறது.
இதனால் ஏமாற்றம் அடைந்த பிரியதர்சினி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார். இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவில் செயல்படும் வரதட்சணை தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே வருண்குமார் பயிற்சியை முடித்து, வேலூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டாக (ஏ.எஸ்.பி) பணி நியமனம் செய்யப்பட்டார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பொறுப்பேற்ற அவர் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் பிரியதர்சினி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் வருண்குமார் மீதான வழக்கு விசாரணை முடியும் வரை அவரை சஸ்பெண்டு செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனு கடந்த ஆகஸ்ட் மாதம் விசாரணைக்கு வந்த போது, தலைமை செயலாளர், உள் துறை செயலாளர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது. புதன்கிழமையன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பிரியதர்சினி நீதிமன்றத்தில் ஆஜரானார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், விசாரணையை வெள்ளிக்கிழமை (22-ந்தேதி) தள்ளி வைத்தார்.
அப்போது வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு ஐகோர்ட்டில் என்னுடைய சேம்பரில், பிரியதர்சினியும், ஏ.எஸ்.பி. வருண்குமாரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார். இதனை ஏற்று வருண்குமார் உயர்நீதிமன்றதில் நீதிபதி முன்பு ஆஜர் ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவருக்கு எதிரான காதல் விவகாரத்தில் இளம் பெண் ஒருவர் கடந்த 3 ஆண்டுகளாக நீதி கேட்டு போராடி வருவது போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.