கண்டதேவி கோயில் விழா: தேரோட்டம் இல்லாமல் நடத்த ஹைகோர்ட் உத்தரவு
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், கண்டதேவி கோயிலில் தேரோட்டம் இல்லாமல் விழாவை நடத்த, உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இந்த விழாவில் நாட்டார்களுக்கு முதல் மரியாதை அளிக்க வேண்டியது இல்லை என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
கண்டதேவி சொர்ண மூர்த்தீஸ்வரர் கோயிலில் திருவிழா நடத்த உத்தரவிடக் கோரி, சொர்ணலிங்கம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.
அவர் தனது மனுவில், கடந்த 7 ஆண்டுகளாக கோயில் திருவிழா நடத்தப்படாமல் உள்ளது. திருத்தேர் அமைப்பு பணிகள் முடிவடைந்த பிறகே கோயில் திருவிழா நடத்தப்படும் என திருக் கோயில் நிர்வாகம் தெரிவிக்கிறது. திருவிழா நடைபெறாமல் இருப்பது பக்தர்களை கவலையடையச் செய்துள்ளது என சொர்ணலிங்கம் குறிப்பிட்டிருந்தார்.
இம் மனு அண்மையில் விசாரணைக்கு வந்தபோது, சிவகங்கை மாவட்ட இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் முத்துதியாகராஜன் ஆஜராகி பதிலளித்தார். அவர், திருக்கோயில் தேர் சீரமைப்புப் பணிகளை இன்னும் தொடங்கவில்லை. மேலும், தேரோட்டம் இல்லாமல் திருவிழா நடத்துவது தொடர்பாக வெவ்வேறு கருத்துகள் நிலவுகின்றன. இதை மீறி நடத்தினால், சட்டம், ஒழுங்கு பாதிக்கும் அபாயம் உள்ளதாகத் தெரிவித்தார்.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, கண்டதேவி திருவிழா தொடர்பாக உஞ்சனை, செம்பொன்மாரி, தென்னிலை, இரகுசேரி நாட்டார்களிடம் கருத்துகள் கேட்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்த போது, செம்பொன்மாரி, இரகு சேரி நாட்டார்கள் சார்பில் விழா நடைபெற வேண்டும் என்றும், உஞ்சனை, தென்னிலை நாட்டார்கள் தரப்பில் தேரோட்டம் இல்லாமல் விழா நடத்தக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டது.
நாட்டார்களின் பிரதிநிதிகள் மற்றும் மனுதாரர், அரசுத்தரப்பு வழக்கறிஞர்கள், அறநிலையத்துறை அதிகாரிகளை நீதிபதிகள் தங்களது அறைக்கு அழைத்துப் பேசினர்.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், வி.எம்.வேலுமணி ஆகியோர் கொண்ட அமர்வு முன் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கே.பி.நாராயணகுமார் வாதிட்டார்.
எஸ்.எம்.எஸ்., இ.மெயிலில் தகவல்
கண்டதேவி வழக்கில் மலேசியா, சென்னையில் வசிக்கும் நாட்டார்க ளிடம் எஸ்.எம்.எஸ் மற்றும் இ.மெயிலில் தகவல் பெறப்பட்டது. உஞ்சனை நாட்டார் ராமசாமி சென்னையிலும், தென்னிலை நாட்டார் ரமேஷ் மலேசியாவில் வசிக்கிறார். அவர்களிடம் கண்டதேவி விழா நடத்துவது தொடர்பாக கருத்து கேட்கப்பட்டது. ராமசாமி எஸ்.எம்.எஸ்.சிலும், ரமேஷ் இ-மெயிலிலும் கண்டதேவி விழாவை தேரோட்டம் இல்லாமல் நடத்தக்கூடாது எனக் கருத்து தெரிவித்தனர். இருவரது கருத்துகளையும் நீதிபதிகள் பதிவு செய்துகொண்டனர்.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு
கண்டதேவி கோயில் விழா நடத்துவதற்கு 4 நாட்டார்களில் இருவர் சம்மதம் தெரிவித்துள்ளனர். உஞ்சனை மற்றும் தென்னிலை நாட்டார்கள் தேரோட்டம் இல்லாமல் விழா நடத்தக்கூடாது எனக் கூறியுள்ளனர்.
தேரோட்டத்துடன்தான் விழா நடைபெற வேண்டும் என்பது பாரம்பரிய முறையல்ல. மேலும் தேரோட்டத்துடன்தான் விழா நடைபெற வேண்டும் என எந்த சாஸ்திரத்திலும் கூறப்படவில்லை.
தேரோட்டம் கிடையாது
எனவே, நிகழாண்டில் தேரோட்டம் இல்லாமல் கண்டதேவி கோயில் விழா நடத்த அனு மதி வழங்கப்படுகிறது. பாரம்பரியமான முறையில் விழா நடைபெறுவதற்கு, கண்டதேவி கோயிலை நிர்வகித்துவரும் சிவகங்கை சமஸ்தான மேலாளர் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கோயில் தேரை புதுப்பிக்க வேண்டும். அதே வேளை யில், நிகழாண்டில் தேரோட்டம் இல்லாமல் விழா நடத்தலாம். நாட் டார் யாரும் தங்களுக்கு மரியாதை அளிக்கும்படி உரிமை கோர முடியாது.
ஜாதிபாகுபாடு கூடாது
ஜாதி வேறுபாடின்றி அனைத்துத் தரப்பினரையும் விழாவில் பங்கேற்கச் செய்ய வேண்டும். விழாவுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என நீதிபதிகள் கூறியுள்ளனர். விசாரணை ஜூன் 30-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.