கொலை வழக்கு: வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராக டக்ளஸ் தேவானந்தாவுக்கு அனுமதி
சென்னை: கொலை வழக்கு தொடர்பான விசாரணையில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராவதற்கு இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
1986-ஆம் ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதி சென்னை சூளைமேடு பகுதியில் நடந்த தாக்குதல் சம்பவத்தில், திருநாவுக்கரசு உள்பட நான்கு பேர் மீது டக்ளஸ் தேவானந்தா உள்பட பலர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில் திருநாவுக்கரசு இறந்தார். இது தொடர்பாக சூளைமேடு போலீஸார், டக்ளஸ் தேவானந்தா உள்பட 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணை, சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்தபோது, 1993-ஆம் ஆண்டு டக்ளஸ் தேவானந்தா தலைமறைவானார்.
இதனால் அவரைத் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து, ஜாமீனில் வெளிவர முடியாத கைது ஆணையை நீதிமன்றம் பிறப்பித்தது.
இந்த நிலையில் இந்தியாவுக்கு வந்தால் எனது உயிருக்குப் பாதுகாப்பு இல்லை. அதனால், தன் மீதான வழக்கில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராக அனுமதிக்கக் கோரி அமர்வு நீதிமன்றத்தில் டக்ளஸ் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை, அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதைத் தொடர்ந்து அமர்வு நீதிமன்றம் பிறப்பித்த ஜாமீனில் வெளிவர முடியாத கைது ஆணையை திரும்பப் பெறவும், வழக்கு விசாரணைக்கு வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராவதற்கும் அனுமதி கோரி டக்ளஸ் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு, நீதிபதி சி.டி.செல்வம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
ஜாமீனில் வெளிவர முடியாத கைது ஆணை நிலுவையில் உள்ளபோது, மனுதாரர் இதர அரசு அதிகாரிகளுடன் இந்தியாவுக்கு வந்திருந்தார். அப்போது, அவரைக் கைது செய்வதற்கான எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை.
இரு நாடுகளுக்கிடையே இருந்த நல்லுறுவு காரணமாக அரசும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மனுதாரர் அவரது மனுவில், கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்தின் மூலம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் வழக்கு விசாரணைக்கு ஆஜராவதாகவும், தேவைப்பட்டால் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதாகவும் உத்தரவாதம் அளித்துள்ளார்.
ஏற்கெனவே, அவர் மீது 13 முறை தாக்குதல் நடத்த முயற்சி நடந்துள்ளது. அதனால், இந்தியா வந்தால் பாதுகாப்பு இல்லை என மனுதாரர் கருதுகிறார். அவரது யூகத்தை நாம் புறக்கணிக்க முடியாது.
எனவே, மனுதாரரின் மனு மீது அமர்வு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. வழக்கு விôசரணைக்காக வீடியோ கான்பரன்ஸ் மூலம் மனுதாரர் ஆஜராக அனுமதி வழங்கப்படுகிறது.
மேலும், விசாரணையின் போது மனுதாரர் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் கருதினால் அவர் நேரில் ஆஜராக வேண்டும். அவ்வாறு ஆஜராகும்போது அவருக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.