ஆதிபராசக்தி கல்லூரி பிரச்சினை... 21 மருத்துவ மாணவர்கள் பயிற்சியை நிறைவு செய்ய ஹைகோர்ட் அனுமதி
சென்னை: சென்னைக்கு அருகே மேல்மருவத்தூரில் தனியார் மருத்துவக்கல்லூரியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்ட 21 மாணவர்கள், அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக்கல்லூரியில் பயிற்சியை மேற்கொள்ள சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி மருத்துவக்கல்லூரி இயங்கி வந்தது. கடந்த 2014-15ம் ஆண்டில் சிலப்பல காரணங்களால் அந்தக் கல்லூரியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது. இதனால் அந்தக் கல்லூரியில் இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்த 21 மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி நிவேதா என்பவர் உட்பட 21 மருத்துவ மாணவர்களும் சென்னை ஹைகோர்ட்டில் தங்களுக்கு நியாயம் வேண்டி மனுத்தாக்கல் செய்தனர்.
அதில், ‘இறுதி ஆண்டுப் படிப்பை முடித்த நாங்கள், சி.ஆர்.ஆர்.ஐ என்ற பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். இந்தப் பயிற்சி முடிந்த பின்னரே நிரந்தர பதிவு எண் வழங்கப்படும். ஆனால், எங்களது கல்லூரியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதால், இந்தப் பயிற்சியை எங்களாம் மேற்கொள்ள இயலவில்லை. எனவே, இது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' என தெரிவித்திருத்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.எம்.சுரேஷ், ‘பாதிக்கப்பட்ட மாணவர்கள் தங்களது மருத்துவ பயிற்சியை அங்கீகரிக்கப்பட்ட வேறு மருத்துவக் கல்லூரிகளில் தொடர அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
மேலும், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மாணவர்கள் அனைவரும் தமிழக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலரிடம் ஒரு வாரத்திற்குள் கோரிக்கை மனு அளிக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து அந்த மனுவின் அடிப்படையில் அம்மாணவர்களை எந்த மருத்துவக் கல்லூரியில் பயிற்சி பெற அனுமதிக்க முடியும் என்ற விவரத்தை தமிழ்நாடு மருத்துவக் கல்வி கவுன்சிலுக்கு சுகாதாரத்துறை செயலர் இரண்டு வாரத்திற்குள் கடிதம் வாயிலாக தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பயிற்சியைப் பெற ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரியிடமிருந்து சம்பந்தப்பட்ட மாணவர்கள் யாரும் தடையில்லா சான்றிதழ் எதையும் பெறத் தேவையில்லை எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.