தஞ்சை, நாகையில் 4 மடங்களை நிர்வகிக்க நித்தியானந்தாவிற்கு ஹைகோர்ட் தடை
சென்னை: தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள 4 மடங்களை நிர்வகிக்க நித்யானந்தாவிற்கு, சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்துள்ளது. சேலத்தை சேர்ந்த ஆத்மானந்தா என்பவர் தொடுத்த வழக்கின் அடிப்படையில், உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
மதுரை ஆதீனத்தைக் கைப்பற்ற நித்யானந்தா மேற்கொண்ட முயற்சி பலனளிக்காமல் போகவே காவிரி டெல்டாவில் உள்ள மடங்களைக் கைப்பற்றுவதில் நித்யானந்தா தரப்பு குறிவைத்தனர்.
சேலத்தைச் சேர்ந்தவர் சுவாமி ஆத்மானந்தா. இவர் சேலம், காரைக்குடியில் சாரதா கல்லூரிகளை இலவசமாக நடத்தி வருகிறார். இந்த ஆத்மானந்தாவின் நிர்வாகத்தில் வேதாரண்யம் கந்தசாமி சாதுக்கள் மடம், அருணாசல சுவாமி மடம், திருவாரூர் சோமநாதர் கோயில் ஆகியவை இருக்கின்றன. இந்த மடங்கள் மற்றும் கோவிலுக்குப் பொறுப்பானவராக ஞானேஸ்வரனாந்தாவை ஆத்மானந்தா நியமித்திருக்கிறார்.
கல்லூரிகளை நடத்திய வகையில் கடன் ஏற்பட்டு அதில் இருந்து மீள்வதற்காக தம்மிடம் உதவி பெற்று வளர்ந்த நித்யானந்தாவிடம் கடன் கேட்க ஆத்மானந்தா முடிவு செய்திருக்கிறார். நித்யானந்தாவும் ரூ2.15 கோடி கடன் கொடுக்க முன்வந்துள்ளார்.
ஆனால் இந்த கடனுக்கு பதிலாக ஆத்மானந்தாவின் கட்டுப்பாட்டில் உள்ள வேதாரண்யம் மடங்கள், திருவாரூர் கோவில் ஆகியவற்றுக்கு தம்மை மடாதிபதியாக நியமிக்க வேண்டும் என்றும் நித்யானந்தா நிபந்தனை விதித்திருக்கிறார்.
இதை முதலில் ஆத்மானந்தாவும் ஏற்றுக் கொண்டு பத்திர பதிவுக்குப் போயிருக்கிறார்.. ஆனால் அப்படியெல்லாம் நித்யானந்தாவை மடாதிபதியாக்கிட சட்டத்தில் இடம் இல்லை என்பதால் சிக்கல் எழுந்தது.
இதனையடுத்து ஒருவழியாக ரூ2.15 கோடி கடனை திருப்பிக் கொடுக்க ஆத்மானந்தா ஒப்புக் கொண்டிருக்கிறார். ஆனாலும் நித்யானந்தா தரப்பு எப்படியும் மடங்களை அபகரித்து விடுவது என்ற நோக்கத்துடன் அவ்வப்போது இந்த மடங்களுக்குள் நுழைந்து ஆக்கிரமிக்கும் வேலையை செய்து வந்தது.
இந்நிலையில்தான் திருவாரூரில் உள்ள சோமநாதர் கோவிலில் தங்கியிருந்த நித்யானந்தாவின் சீடர் ராகவன் என்பவர் ஆத்மானந்தா தரப்பைச் சேர்ந்த அர்ச்சகர் ராமமூர்த்தியை கழுத்தை நெரித்து படுகொலை செய்ய முயற்சித்திருக்கிறார். இந்த விவகாரம் போலீசுக்கு போயுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஆத்மானந்தா தரப்பு வேதாரண்ய மடங்களில் இருந்த நித்யானந்தா சீடர்களை அடித்து துவைத்து விரட்டியுள்ளது. திருவாரூரிலும் இதேபோல் நித்யானந்தா சீடர்கள் அடித்து விரட்டினர்.
இதேபோல தஞ்சாவூர் பழைய திருவை யாறு சாலை, வடக்கு வாசல் பகுதியில் பால்சாமிகள் மடம் என அழைக்கப்படும் நாராயண ஞானதேசிகர் மடம் உள்ளது. 150 ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படும் இந்த மடத்தை, சுவாமி துருவானந்தர் என்பவர் நிர்வகித்து வருகிறார். இந்த மடத்துக்கு தஞ்சாவூர், அன்னப்பன்பேட்டை, வெண்ணு குடி, அரித்துவாரமங்கலம் உள் ளிட்ட இடங்களில் 60 ஏக்கர் நிலங்கள் உள்ளன. இதன் மூலம் வரும் வருவாயில் ஏழை மாணவர்களுக்கு உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த பால்சாமி சித்தர் மடத்தையும் இப்படித்தான் நித்யானந்தா சீடர்கள் ஆக்கிரமிக்க முயன்று பொதுமக்களால் பின்னி எடுக்கப்பட்டனர்.
இதேபோல, திருவாரூரில் உள்ள பழமையான மடங்களை உரிமை கொண்டாடிய நித்யானந்தாவின் சீடர்கள் பொதுமக்களால் வெளியேற்றப்பட்டனர். வேதாரண்யம் சாதுக்கள் மடத்திற்குள் சென்ற மடத்தின் நிர்வாகி ஞானேஸ்வரானந்தாவை உள்ளே வரக்கூடாது என நித்தியானந்தா சீடர்கள் கூறியதால் நித்யானந்தா சீடர்களுக்கும் நிர்வாகியின் ஆதரவாளர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது இந்த மோதல் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தாசில்தார் குமாரும் பிரச்சனையை சமாளிக்க இரு தரப்பினரையும் மடத்தைவிட்டு வெளியேற்றி மடத்திற்கு பூட்டுபோட்டனர்.
4 மடங்களுக்கும் சட்டப்படி நித்தியானந்தாவை மடாதிபதியாக நியமிக்க முடியாது என கூறப்பட்ட நிலையில் இப்பிரச்னை பூதாகரமாக உருவெடுத்தது.
இந்நிலையில்,இது குறித்து வழக்கு தொடரப்பட்ட நிலையில்,தஞ்சை,நாகையில் உள்ள 4 மடங்களுக்கு மடாதிபதியாக செயல்பட நித்தியானந்தாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இது தொடர்பாக பதிலளிக்குமாறு நித்தியானந்தாவிற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி மார்ச் 14ம் தேதிக்கு வழக்கை தள்ளி வைத்து உத்தரவிட்டார்.