லைக்கா பற்றி வேல்முருகன் பொது வெளியில் பேசத் தடை! - உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: லைக்கா நிறுவனம் பற்றி பொது வெளியில் பேச தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சமீபத்தில் இலங்கையில் லைக்கா நிறுவனம் ஈழப் போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு வீடிகள் கட்டி, அதை ரஜினி மூலம் அந்த மக்களுக்குத் தர ஏற்பாடு செய்திருந்தது.
லைகா நிறுவனத்தின் தலைவர் சுபாஷ்கரன், இலங்கை முன்னாள் அதிபரான ராஜபக்சேவுக்கு நெருக்கமானவர் என்பதால் நடிகர் ரஜினிகாந்த் இலங்கைக்கு செல்லக்கூடாது என்று தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
இந்த வேண்டுகோளை ஏற்று நடிகர் ரஜினிகாந்த், தனது இலங்கைப் பயணத்தை ரத்து செய்தார்.
இதனிடையே, கடந்த மார்ச் 25-ம் தேதி தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வேல்முருகன் லைகா நிறுவனத்தை அவதூறாக பேசியதாக சென்னை சைதாபேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மேலும் இதற்கான நஷ்ட ஈடாக வேல்முருகன் ரூ 10 கோடி தர வேண்டும் என்றும் தனது வழக்கில் கூறியிருந்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது வேல்முருகன் லைக்கா நிறுவனத்தை பற்றியோ, அதனைச் சார்ந்தவர்கள் பற்றியோ இனி பொதுவெளியில் பேச இடைக்காலத் தடை விதிப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.