அரவக்குறிச்சி, தஞ்சை தொகுதி தேர்தல்களுக்கு எதிரான மனு தள்ளுபடி
அரவக்குறிச்சி, தஞ்சை தொகுதிகளில் ஏற்கனவே போட்டியிட்ட வேட்பாளர்களே போட்டியிடுவதால் தேர்தலை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது,
மதுரை: அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதி தேர்தல்களை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை மதுரை உயர்நீதிமன்ற கிளை தள்ளுபடி செய்துள்ளது.
தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் நவம்பர் 19-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தல்களை ரத்து செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர் பிரகாஷ் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதிகளில் முறைகேடான முறையில் அதிக பணப்புழக்கம் நடைபெற்றதால் தேர்தல் ஆணையம் இரு தொகுதிகளுக்கும் தேர்தலை ரத்து செய்தது. அந்த தொகுதிகளுக்கு நவம்பர் 19-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
கடந்த தேர்தலின் போது திமுக, அதிமுக உட்பட முக்கிய கட்சிகளின் சார்பில் போட்டியிட்டவர்களே தற்போதும் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். அவர்கள் போட்டியிடுவதற்கு தடை இல்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. முறைகேடான பணப்புழக்கத்திற்கு காரணமானவர்கள் மீண்டும் போட்டியிடுவது முறையல்ல. அவர்கள் போட்டியிட தடை விதிக்க வேண்டும். அந்த இரு தொகுதிகளுக்கு தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
இம்மனுவை இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளை விசாரித்து தள்ளுபடி செய்தது.