போலி கையெழுத்து: சசிகலா புஷ்பாவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய கோர்ட் உத்தரவு
மதுரை: முன்ஜாமீன் வக்காலத்தில் சசிகலா புஷ்பா போலி கையெழுத்திட்டதாக கூறப்படும் விவகாரம் குறித்து வழக்குப் பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்ற்த்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
இளம்பெண்கள் பானுமதி, ஜான்சி ஆகியோர் சசிகலா புஷ்பா குடும்பத்தினர் மீது பாலியல் தொல்லை புகார் கொடுத்திருந்தனர். அதில் நிர்வாண மசாஜ் செய்ய கட்டாயப்படுத்துவதாகவும் கூறப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து சசிகலா புஷ்பா உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் மீது தூத்துக்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதனால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முதலில் முன் ஜாமீன் கோரினார் சசிகலா புஷ்பா.
டூப்ளிகேட் கையெழுத்து
டெல்லி உயர்நீதிமன்ற அறிவுரைப்படி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் சசிகலா புஷ்பா சார்பில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அம்மனு மீதான விசாரணையின் போது, வெளிநாட்டில் உள்ள சசிகலா புஷ்பா, முன்ஜாமீன் வக்காலத்தில் மதுரையில் வழக்கறிஞர் முன் எப்படி கையெழுத்திட முடியும்? அவருக்கு பதிலாக யாரோ போலி கையெழுத்திட்டுள்ளனர் என அரசுத் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.
கோர்ட் கேள்வி
இதையடுத்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சசிகலா புஷ்பாவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனடிப்படையில் கடந்த மாதம் 29-ந் தேதி நீதிமன்றத்தில் சசிகலா புஷ்பா ஆஜாரானர்.
விளக்கம்
அப்போது தாம் டெல்லியில் இருந்து முன்ஜாமீன் வக்காலத்தில் கையெழுத்து போட்டு கணவரிடம் கொடுத்தனுப்பினேன் என விளக்கம் அளித்தார்.
இதன்பின்னர் இவ்வழக்கின் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.
வழக்கு பதிவு செய்ய உத்தரவு
இந்த நிலையில் இன்று சசிகலா புஷ்பாவின் முன்ஜாமீன் மனுவை மதுரை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அத்துடன் போலி கையெழுத்து விவகாரத்தில் சசிகலா புஷ்பா மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கவும் போலீசுக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது.