நதி நீர் இணைப்பு நிறுத்தம் ஏன்?... தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
மதுரை: தாமிரபரணி - நம்பியாறு- கருமேனியாறு நதி நீர் இணைப்பு வெள்ள நீர்க் கால்வாய் வெட்டும் பணி நிறுத்தப்பட்டிருப்பது குறித்து நான்கு வாரத்திற்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் ராதாபுரம் எம்.எல்.ஏ அப்பாவு உயர்நீதிமன்றக் கிளையில் ஒரு வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அதில், அரசியல் காரணங்களுக்காக இந்தப் பபணிகள் நிறுத்தப்பட்டிருப்பதாக ஒரு பேச்சு உள்ளது. தாமிரபரணி -நம்பியாறு -கருமேனியாறு நதிநீர் இணைப்பு வெள்ளநீர் கால்வாய் வெட்டப்பட்டிருந்தால் கடலில் வீணாக கலக்கும் தாமிரபரணி தண்ணீரால், வறண்டு கிடக்கும் ராதாபுரம் , நான்குநேரி மற்றும் சாத்தான்குளம் பகுதி விவசாயம் மட்டுமின்றி நிலத்தடி நீர் மட்டமும் உயரும்.
எனவே இந்த பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்று அவர் கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றக் கிளை 4 வாரங்களுக்குள் இதுகுறித்து பதிலளிக்குமாறு கூறி தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.