கன்னித்தீவு கதையாக நீளும் ராமஜெயம் கொலை வழக்கு... 2 வாரத்திற்கு ஒத்திவைப்பு
சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கு விசாரணை கன்னித்தீவாய் நீள்கிறது. கொலையாளியின் நிழலைக்கூட இன்னும் நெருங்க முடியவில்லை. சிபிஐக்கு மாற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கடந்த 29.3.2012 அன்று திருச்சியில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். ராமஜெயம் கொலை செய்யப்பட்டு 4 ஆண்டுகள் ஆன நிலையிலும், இதுவரை குற்றவாளிகள் பிடிபடவில்லை.
ராமஜெயம் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி அவரது மனைவி லதா, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2014ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் இதுவரை 6 ரகசிய அறிக்கைகளை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
குற்றவாளிகள் குறித்து முக்கிய தகவல் கிடைத்திருப்பதாகவும், அந்த தகவல் அடிப்படையில் குற்றவாளிகளை நெருங்கிவிட்ட தாகவும், அவர்களை கைது செய்ய மேலும் அவகாசம் தர வேண்டும் என்றும் சிபிசிஐடி போலீஸ் தரப்பில் ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தில் வேண்டுகோள் வைக்கப்பட்டது.
இறுதியாக, கடந்த மார்ச் 8ல் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சிபிசிஐடி போலீஸார் மேலும் 3 மாதம் அவகாசம் கேட்டனர். இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதி, ஜூன் 1ம் தேதிக்குள் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க உத்தரவிட்டார்.
இந்த வழக்கு நீதிபதி தேவதாஸ் ஜூன் 1ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிசிஐடி போலீசாரின் 7வது ரகசிய அறிக்கையை கூடுதல் அட்வகேட் ஜெனரல் கே.செல்லப்பாண்டியன் தாக்கல் செய்தார்.
மனுதாரரின் வழக்கறிஞர் ரவி வாதிடும்போது, மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜராவதற்காக விசாரணையை ஜூன் 8ம் தேதிக்கு ஒத்திவைக்குமாறு கோரினார். அதை ஏற்க மறுத்த நீதிபதி, சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்துள்ள ரகசிய அறிக்கையை படித்துப் பார்க்க வேண்டியுள்ளதால் விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்திவைப்பதாக உத்தரவிட்டார்.
இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிசிஐடி விசாரணையில் முன்னேற்றம் இருப்பதால் சிபிஐ விசாரணை கோரும் வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்று தமிழக அரசு தரப்பு கோரிக்கை விடுத்தது. அதே நேரத்தில் இந்த வழக்கில் மனுதாரர் லதா தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜராக உள்ளததால் 2 வாரம் அவகாசம் கேட்கப்பட்டது. இதனை அடுத்து வழக்கு விசாரணையை மேலும் 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ராமஜெயம் கொலை வழக்கு கன்னித்தீவு கதையாக நீள்கிறது. கொலையாளி யார் என்று தெரிந்தே கைது செய்யப்படாமல் உள்ளார்களா என்ற கேள்வி திருச்சி மாவட்ட மக்களிடையே எழுந்துள்ளது.