தாமிரபரணியில் இருந்து தண்ணீர் எடுக்க பெப்சி, கோக் ஆலைகளுக்கு ஹைகோர்ட் கிளை அதிரடி தடை !
பன்னாட்டு நிறுவனங்கள் தாமிரபரணியில் இருந்து தண்ணீர் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மதுரை: தாமிரபரணியில் இருந்து தண்ணீர் எடுக்க பெப்சி மற்றும் கோக் ஆலைகளுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை அதிரடியாக தடை விதித்துள்ளது.
திருநெல்வேலி கங்கை கொண்டான் சிப்காட் வளாகத்தில் கோகோ கோலா குளிர்பான கம்பெனி இயங்கி வருகிறது. தொடக்கத்தில் 3 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுப்பதாக அனுமதி பெற்று படிப்படியாக ஒரு நாளுக்கு 10 லட்சம் லிட்டர் வரை தண்ணீர் எடுத்து வருகிறது இந்நிறுவனம்.
இதே சிப்காட் வளாகத்தில் பெப்சி கம்பெனிக்கும் 36 ஏக்கர் ஒதுக்கப்பட்டு அதுவும் தாமிரபரணி ஆற்று நீரை உறிஞ்ச அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. நீதிமன்றங்களிலும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இதனிடையே சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் பிரபாகர் என்பவர் தொடர்ந்த வழக்கு மீது இன்று விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையின் முடிவில், பெப்சி மற்றும் கோக் நிறுவனங்கள் தாமிரபரணியில் இருந்து தண்ணீர் எடுக்க தடை விதித்து அதிரடி உத்தரவிட்டுள்ளது.