தமிழகத்தில் எம்.டி, எம்.எஸ் மருத்துவ மாணவர் சேர்க்கை ரத்து.. புது பட்டியல் வெளியிட ஹைகோர்ட் உத்தரவு
தமிழகத்தில் எம்.டி,, எம்.எஸ் மருத்துவ மாணவர் சேர்க்கையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை: தமிழ்நாட்டில் எம்.டி., எம்.எஸ்., மாணவர் சேர்க்கையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எம்.டி., எம்.எஸ் படிப்புகளுக்கு 2 வாரங்களுக்கு முன்னர் மாணவர் சேர்க்கையை தமிழக அரசு நடத்தியது. இதில் 1066 இடங்களில் 999 இடங்கள் அரசு டாக்டர்களுக்கு ஒதுக்கப்பட்டது. மேலும், அரசு டாக்டர்களுக்கு ஊக்க மதிப்பெண்களும் வழங்கப்பட்டன.
இதனை எதிர்த்து தனியார் டாக்டர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதில், முதுநிலை மருத்துவ சேர்க்கையில் கூடுதல் மதிப்பெண் வழங்கும் அரசாணையை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
மேலும், கிராமப்புற மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கும் அரசாணையும் ரத்து செய்தது நீதிமன்றம். 3 கலந்தாய்வு பட்டியல்களையும் ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம், மருத்துவ முதுநிலை படிப்பிற்கு புதிய தகுதி பட்டியலை வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
புதிய பட்டியல் அடிப்படையில் எம்.டி., எம்.எஸ்., படிப்பில் சேர மீண்டும் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து சென்னையில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், வழக்கமாக பின்பற்றப்படும் நடைமுறையைதான் அரசு பின்பற்றியது என்றும் இந்த வழக்கு மேல்முறையீடு செய்யப்படும் என்றும் கூறினார்.