புதிய அமைச்சரவை குறித்து வழக்கு: ட்ராபிக் ராமசாமிக்கு உயர்நீதிமன்றம் குட்டு.. ரூ 25000 அபராதம்!
சென்னை: புதிய அமைச்சரவை குறித்து குற்றம்சாட்டி வழக்குத் தொடர்ந்த ட்ராபிக் ராமசாமிக்கு சென்னை உயர்நீதி மன்றம் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, ரூ 25 ஆயிரம் அபராதமும் விதித்தது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி, வக்கீல் என்.ராஜாராம் ஆகியோர் இணைந்து தாக்கல் செய்த பொது நல மனு நேற்று விசாரணைக்கு வந்தது.
அம்மனுவில், "தமிழக முதலமைச்சராக பதவி வகித்த ஜெயலலிதாவுக்கு, ஊழல் வழக்கில் ஜெயில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
எனவே, ஜெயலலிதா பொதுச் செயலாளராக உள்ள அ.தி.மு.கவைச் சேர்ந்தவர்களை முதலமைச்சராகவும், பிற துறைகளின் அமைச்சர்களாகவும் பதவி ஏற்க அனுமதிக்க கூடாது. அந்த கட்சியை சேர்ந்தவருக்கு அமைச்சர்களாக பதவி பிரமாணம் செய்து வைக்கக் கூடாது என்றும் கடந்த 29-ந்தேதி தமிழக கவர்னரின் செயலாளர், தலைமை செயலாளர், இந்திய தலைமை தேர்தல் ஆணையாளர் உள்ளிட்டோருக்கு மனு கொடுத்தும் பரிசீலிக்கவில்லை. ஆகையால் என் மனுவை பரிசீலிக்க அவர்களுக்கு உத்தரவிட வேண்டும்," என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் ராஜாராம் ஆஜராகி வாதிட்டார்.
இதையடுத்து இந்த மனு மீதான தீர்ப்பை நேற்று மாலை பிறப்பித்த நீதிபதிகள் மனுவை டிஸ்மிஸ் செய்தனர். முகாந்திரமில்லாத வழக்கைப் பதிவு செய்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்தாக ட்ராபிக் ராமசாமியைக் கண்டித்த நீதிபதிகள், அவருக்கு ரூ.25000 அபராதமும் விதித்து உத்தரவிட்டனர்.