காரைக்கால் வினோதினி மீது ஆசிட் வீசிய சுரேஷ்: ஆயுள் தண்டனையை உறுதி செய்த ஹைகோர்ட்
சென்னை : காரைக்கால் ஐடி ஊழியர் வினோதினியை ஆசிட் வீசிக் கொன்ற வழக்கில் கொலையாளி சுரேஷ்குமாருக்கு காரைக்கால் நீதிமன்றம் அளித்த ஆயுள்தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
புதுவை யூனியன் பிரதேசம் காரைக்கால் ஜெயபாலின் மகள் வினோதினி. இவர் சென்னை சைதாப்பேட்டையில் தங்கி இருந்து சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அவரை ஒருதலையாக காதலித்தான் கட்டிடத் தொழிலாளி சுரேஷ். அவனது காதலை வினோதினி ஏற்கவில்லை. கடந்த 2012ம் ஆண்டு தீபாவளிக்கு வினோதினி காரைக்கால் போது பேருந்து நிலையத்தில் வினோதியின் முகத்தை ஆசிட்டை வீசினான்.
இதில் முகம் முழுவதும் வெந்து கண் பார்வை பறிபோன நிலையில் மிகவும் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடிய வினோதினி, 2013ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உயிரிழந்தார். இந்த வழக்கில் சுரேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணை காரைக்கால் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. ஆசிட் வீச்சில் வினோதினி பலியான வழக்கில் குற்றவாளி சுரேசுக்கு 2013ம் ஆண்டு ஆயுள் தண்டனை விதித்து காரைக்கால் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. காயப்படுத்துதல், கொடுங்காயம் ஏற்படுத்துதல், கொலை செய்ய முயலுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும்,வினோதினியின் தந்தை ஜெயபால் மீதும் ஆசிட் பட்டு காயம் ஏற்பட்டது குறித்த வழக்கில், சுரேஷுக்கு மேலும் நான்கரை ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
மகளின் மரணத்தால் மனமுடைந்த வினோதினியின் தாயாரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இரு உயிர்கள் பலியாக காரணமான சுரேஷ் தனக்கு அளிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து சுரேஷ் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தான்.
காரைக்கால் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நாகமுத்து, பாரதிதாசன் ஆகியோர் குற்றவாளி சுரேஷ் குமாருக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்தனர்.