18 அதிமுக எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: ஹைகோர்ட் நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பால் பரபரப்பு
தினகரன் ஆதரவு 18 அதிமுக எம்.எல்.ஏக்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்த வழக்கில் நீதிபதிகள் இருவரும் மாறுபட்ட தீர்ப்பு அளித்துள்ளனர்.
Recommended Video
சென்னை: தினகரன் ஆதரவு 18 அதிமுக எம்.எல்.ஏக்களை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்த வழக்கில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பை அளித்துள்ளனர். இதனால் 3-வது நீதிபதியின் தீர்ப்பை கேட்க இரண்டு நீதிபதிகள் முடிவு செய்துள்ளனர்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மாற்றக் கோரி கடந்த ஆண்டு ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏக்கள் மனு அளித்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நம்பிக்கை வாக்கெடுப்பு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக மனுத் தாக்கல் செய்தது.
இந்த வழக்கு தொடரப்பட்டதையடுத்து தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்களையும் தகுதி நீக்கம் செய்ய சபாநாயகர் தனபாலுக்கு அதிமுக கொறடா ராஜேந்திரன் பரிந்துரைத்தார். இதையடுத்து 18 எம்.எல்.ஏக்களையும் சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் 18 எம்.எல்.ஏக்களும் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அடங்கிய பெஞ்ச் கடந்த ஜனவரி 24-ந் தேதி வழக்கு விசாரணைகளை முடித்து தீர்ப்பை ஒத்தி வைத்தனர்.
இவ்வழக்கில் இன்று பகல் 1 மணிக்கு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். 18 எம்.எல்.ஏக்களை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்தது சரியா? தவறா? என்கிற முடிவுக்கு வர இயலவில்லை என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தீர்ப்பளித்தார். ஆனால் 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்தது செல்லாது; சபாநாயகர் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்பட்டிருக்கிறார் என நீதிபதி சுந்தர் தீர்ப்பளித்தார்.
இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை அளித்ததால் 3-வது நீதிபதியின் தீர்ப்புக்கு ஒத்திவைக்கப்பட்டது.
3-வது நீதிபதியின் தீர்ப்பு வரும் வரை எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கம் தொடரும் என்றும் 18 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடத்த கூடாது எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கான நெருக்கடி தணிந்துள்ளது.
மேலும் 3-வது நீதிபதியின் தீர்ப்பு வரும் வரை நம்பிக்கை வாக்கெடுப்பும் நடத்தக் கூடாது எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.