திருவிழாக்களில் குத்துப்பாட்டு, டான்ஸ் கூடாது… ஹைகோர்ட் கண்டிப்பு
சென்னை: ‘'நீங்க கரகத்தை தூக்குங்க... தூக்கமா போங்க.... பொங்கலை வைங்க வைக்காம போங்க.... ஆனா திண்டுக்கல் ரீட்டாவோட ஆடலும் பாடலும் அவசியம் வேணும்...''
இது கோவில் திருவிழா கூட்டங்களில் கிராம இளசுகள் வைக்கும் கோரிக்கை. இதுபோன்று கோயில் திருவிழாக்களில் நடன நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு அனுமதி கோரிய மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்துள்ளது.
நாமக்கல், ஈரோடு, சேலம் மற்றும் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 36 பேர் உயர்நீதிமன்றத்தில் இது குறித்து மனுதாக்கல் செய்தனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
எங்களது ஊரில் உள்ள கோயில்களில் ஆண்டுதோறும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் திருவிழாக்கள் நடைபெறும்.
அப்போது பொழுது போக்கு நிகழ்ச்சிகள், கலாசார, கிராமிய நடனங்கள் போன்றவை அதில் இடம்பெறும். இந்த கலாசார நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு அனுமதி கோரி சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளிடம் மனு அளித்தோம். ஆனால், எங்களது மனு குறித்து போலீஸ் அதிகாரிகள் இதுவரை பரிசீலிக்கவில்லை. எனவே, எங்களது கோயில் திருவிழாக்களில் கலாசார நடன நிகழ்ச்சி நடத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என மனுக்களில் கோரப்பட்டது.
நீதிபதி உத்தரவு
இந்த மனு நீதிபதி வி.ராமசுப்ரமணியன் முன்பு விசாரணை நடந்தது. விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
விசாரணையின்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், இது போன்ற கலாசார நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு பல்வேறு நிபந்தனைகளுடன் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
நிபந்தனையுடன் அனுமதி
அதில், குறிப்பாக ஆபாச நடனங்கள் இருக்கக் கூடாது; இரட்டை அர்த்த வசனங்கள் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
அந்த வழக்குகளை கவனமாக பார்த்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அனுமதியுடன் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது தெரிகிறது.
மீறப்பட்ட விதிகள்
ஆனால், அதன் பிறகு அந்த கோயில் நிர்வாகத்தினர் நிகழ்ச்சியின்போது விதிகளை மீறினார்களா என்பது குறித்து அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்யவில்லை.
ஆனால் இது போன்ற மற்றொரு வழக்கில், தனி நபர்கள், ஆபாச நடனம் நடத்துவதற்காக பிரார்த்தனை செய்யக் கூடிய பொது இடத்தை பயன்படுத்த முயற்சிக்கின்றனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆபாச நடனங்கள்
மேலும், கோயில் நிர்வாகத்தினர் நடன நிகழ்ச்சி நடத்துவதற்கு அனுமதி கோரவில்லை. கோயிலுக்குத் தொடர்பு இல்லாதவர்கள் வணிக ரீதியாக பயன்படுத்துவதற்கு அனுமதி கோருகின்றனர். அந்த நிகழ்ச்சிகளில் பெண்களை ஆபாசமாக சித்திரித்து நடன நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.
ஆபாசமாக சித்தரிக்க தடை
பெண்கள் ஆபாச தடைச் சட்டத்தில் இவை போன்றவை தடை செய்யப்பட்டுள்ளன. துண்டு பிரசுரங்கள், புத்தகங்களில் பெண்களை ஆபாசமாக சித்திரிப்பதற்கு அந்தச் சட்டம் தடை செய்கிறது.
விளம்பரங்களில் கூட அது போன்று பெண்களை சித்திரிக்கக் கூடாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. . இது போன்று தவறுகள் நடக்கும் எனத் தெரிந்தும் அனுமதி வழங்க முடியாது. எனவே மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன என உத்தரவில் தெரிவிக்கபட்டுள்ளது.
ஹோட்டல்களிலும் கூடாது
இதே போன்ற மற்றொரு வழக்கில், நடன நிகழ்ச்சி நடத்துவதற்கு அனுமதி வழங்க உத்தரவிடக் கோரி ஹோட்டல் பிரீமியம் ஸ்டார் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதி வி.ராமசுப்ரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தது.
மனு தள்ளுபடி
மனுவை விசாரித்த நீதிபதி, சென்னையில் உள்ள எந்த ஒரு ஹோட்டலிலும் நடன நிகழ்ச்சி நடத்துவதற்கு போலீஸார் அனுமதி வழங்கவில்லை. அதனால், அனுமதி வழங்கக் கோரிய இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டார்.