ஜெ., சசி மீதான டான்சி வழக்கு: 22 ஆண்டுக்குப் பின் முடித்து வைத்தது சென்னை ஹைகோர்ட்
சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகியோர் மீதான டான்சி நில வழக்கை 22 ஆண்டுகளுக்குப் பின்னர் சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.
சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள அரசு நிறுவனமான தமிழ்நாடு சிறு தொழில்கள் கழகத்துக்குச் (டான்சி) சொந்தமான 3 ஏக்கர் நிலத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும், அவரது தோழி சசிகலாவும் 1992-ம் ஆண்டில் இருவரும் பங்குதாரர்களாக இருந்த ஜெயா பப்ளிகேஷனுக்காக குறைந்த விலைக்கு வாங்கியதாகவும், அதனால் அரசுக்கு ரூ.2.76 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதா, சசிகலாவுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து 2000-ம் ஆண்டு தீர்ப்பளித்தது.
பின்னர் சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் சிறப்பு நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதித்தது. ஆனால் தண்டனையை ரத்து செய்யவில்லை.
பின்னர் 2003-ம் ஆண்டு இவ்வழக்கில் இருந்து ஜெயலலிதா உள்ளிட்டோரை விடுதலை செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ராஜேந்திரபாபு, பி.வெங்கட்ராம ரெட்டி ஆகியோர் கொண்ட பெஞ்ச் விசாரித்து ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோரை விடுவித்து 2003-ம் ஆண்டு நவம்பர் மாதம் தீர்ப்பளித்தது.
அத் தீர்ப்பில், தேர்தல் நடத்தை விதிகளை மீறியது சரியா, இல்லையா என சிந்தித்துப் பார்க்க வேண்டும். டான்சி சொத்தை திருப்பித் தர வேண்டும். நீங்கள் செய்த காரியத்துக்காக மனசாட்சிப்படி பரிகாரம் தேடிக்கொள்ள வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
முன்னதாக 1993-ம் ஆண்டு திமுகவைச் சேர்ந்த ஆலந்தூர் பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், அரசுக்குச் சொந்தமான டான்சி நிலத்தை ஜெயா பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்துக்கு விற்றது சட்டவிரோதம். அதற்கான விற்பனைப் பத்திரத்தை ரத்துசெய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு கடந்த 22 ஆண்டுகளாக நிலுவையில் இருந்தது. உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் கொண்ட முதல் பெஞ்ச் முன்பு இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அட்வகேட் ஜெனரல் சோமையாஜி ஆஜராகி, டான்சிக்கு சொந்தமான சொத்து அந்த நிறுவனத்துக்கே திருப்பித் தரப்பட்டுவிட்டது. எனவே இந்த வழக்கு அவசியமற்றது என்று வாதிட்டார்.
இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் ஆலந்தூர் பாரதி தொடர்ந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.